ஒன்றோடு ஒன்றிணைந்து ஒவ்வொரு நாளும் பிள்ளை போல் பார்த்து வளர்த்த யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எத்தனை ஆண்டுகள் யானைகளை பராமரித்து வந்தாலும் அது ஒரு காட்டு விலங்கு என்பதை நாம் உணர வேண்டும்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. தெப்பக்காடு , அபயாரண்யம் ஆகிய இரு யானைகள் முகாமிலும் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வளர்ப்பு யானைகளை நாள்தோறும் காலை மாலை என இரு வேலையிலும் மாயாற்றில் குளிக்க வைத்து உணவு மாடத்திற்கு அழைத்து வந்து உணவு கொடுத்த பின் மீண்டும் பாகன்கள் யானைகளை அழைத்துக் கொண்டு தங்கள் இருக்கும் பகுதிக்கு கொண்டு சென்று கட்டி வைக்கின்றனர்.
பகல் நேரங்களில் வனப் பகுதிகளுக்குள் சென்று யானைகளுக்கு தேவையான இலை தலைகளை சேகரிக்க யானைகளை பாகன்கள் வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்வார்கள் இது மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகளை விரட்டவும் பிடிக்கவும் யானைகள் முகாமில் வளர்க்கப்படும் கும்கி யானைகள் பெரிதும் பங்கு வகிக்கின்றன.
இதனிடையே முதுமலை யானைகள் முகாமில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வரும் மசினி என்ற யானை இன்று பாகனை தாக்கி கொன்றுள்ளது . கடந்த 2006 ஆம் ஆண்டு இதே முதுமலை வனப்பகுதியில் கார்குடி பகுதியில் குட்டியாக மீட்கப்பட்ட மசினி யானை 2016 ஆம் ஆண்டு சமயபுரம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. 2018 ஆம் ஆண்டு கஜேந்திரன் என்ற பாகனை தாக்கிக் கொன்றது. அதன் பின்பு 2019 ஆம் ஆண்டு மீண்டும் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் மசினி யானையை பொம்மன் என்ற பாகன் பராமரித்த நிலையில் அவரை தாக்க மசினி யானை முயன்ற போது அவர் உயிர் தப்பினார். இதையடுத்து பாலன் என்ற பாகன் மசினி யானையை பராமரிக்க நியமிக்கப்பட்டார். பல கட்டங்களில் மசினி யாணை பிடிவாதமாக இருந்தாலும் பாகன் பாலன் அதை சிறந்த முறையில் கையாண்டு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2019 முதல் நடைமுறையில் உள்ள ஆண்டு வரை மசினியை பராமரித்து வந்த பாகனை இன்று மசினி யானை தாக்கிக் கொல்லும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஏனோ எதிர்ப்பாராத சம்பவத்தால் இன்று யானைக்கு உணவளித்து பின்பு வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்ல காலில் சங்கிலியை கட்டும் பொழுது அந்த பயங்கர சம்பவம் அரங்கேறியது. சங்கிலியை கட்டும் முன் திடீரென ஆக்ரோஷம் அடைந்த மசினியாணை காலால் மிதித்தது. இதில் நிலை குலைந்த பாலனை சக யானை பாகங்கள் மீட்டனர் ஆக்ரோஷத்துடன் இருந்த யானையை மற்ற பாகன்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பாலன் பரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தாயைப் பிரிந்து வனப்பகுதியில் பரிதவிக்கும் யானைக் குட்டிகளை மீட்கும் வனத்துறையினர் அவைகளை மீட்டு பராமரிக்க யானைகள் முகாமில் பாகன்களை நியமிக்கின்றனர். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாகன்கள் சொல்பேச்சுக்கும், கட்டளைகளுக்கும் கட்டுப்படும் யானைகள் சில சமயங்களில் அவர்களைத் தாக்கிக் கொல்லும் அளவிற்கு ஆக்ரோஷம் அடைகின்றன. எத்தனை ஆண்டுகள் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் காடுகளில் அவைகள் வாழ்ந்த சுதந்திரம் நினைவில் இருந்து கொண்டே இருக்கும் .ஒரு சமயம் இது போன்ற சம்பவங்கள் வெளிப்படும் பொழுது அவைகளும் காட்டு விலங்கு என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.
செய்தியாளர்: அய்யாசாமி ( நீலகிரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Forest, Nilgiris, Tamil News