விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சிவராத்திரியை முன்னிட்டு வீட்டின் உரிமையாளர்கள் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்டு வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை கூட்டம் 30 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள மொட்டமலை 11வது சிறப்பு காவல் படை பிரிவில் சார்பு ஆய்வாளர் பணிபுரிந்து வரும் கோமதி விநாயக கண்ணன். இவர் தனது குடும்பத்தினருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரில் உள்ள அவரது குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூஜையறை மற்றும் படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பிரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 30 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் மூன்று லட்சம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல முன்னாள் ராணுவ வீரர்களின் வீடுகளை நோட்டமிட்ட கொள்ளையர்கள் சிவராத்திரியை முன்னிட்டு வீட்டின் உரிமையாளர்கள் கோவிலுக்கு சென்றிருக்கும் சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து வீட்டின் அனைத்து பகுதி அறைகளிலும் நகை, பணம் சிக்குமா என்று தேடி உள்ளனர்.
வீட்டின் உரிமையாளர்கள் நகைகள் மற்றும் பணத்தை வங்கி லாக்கரில் வைத்திருந்ததால் உள்ளே நுழைந்த கொள்ளையர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் உடைத்து சிதறடித்து விட்டு சென்று விட்டனர். காலை வீடுகளுக்கு திரும்பிய உரிமையாளர்கள் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து மீண்டும் பிற்பகலில் ராஜீவ்காந்தி நகருக்கு வரவழைக்கப்பட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் விருதுநகரில் இருந்து மோப்பநாய் ஆதன் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் சென்ற வீடுகள் மற்றும் தெருக்களில் சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் சபரிநாதன், ஆய்வாளர் கீதா தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Theft