விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரத்தில் ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியான ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி இன்று கைது செய்யப்பட்டார்
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலபுலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் செயல்பட்டு வந்தது. அங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவது அம்பலமானது.
ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நபர்களை அறைகளில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது என பல்வேறு குற்றச் செயல்கள் விசாரணையில் தெரியவந்தன. மேலும் ஆசிரமத்திலிருந்து இதுவரை 16 பேர் காணாமல் போயிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்ரமத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்ரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அனுமதியின்றி ஆஸ்ரமம் நடத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆஸ்ரமவாசிகளை வெளிமாநிலத்திற்கு கடத்தியது, மனநலம் குன்றியோர், ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆசிரம பணியாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குரங்கு தாக்கி காயமடைந்த ஆஸ்ரம நிர்வாகி அன்பு ஜூபின் மற்றும் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரது மனைவி மரியா ஜூபின் ஆகிய இருவரும் சிகிச்சையில் இருப்பதால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் உடல் நலம் சரியான முக்கிய குற்றவாளி மரியா ஜுபினை செஞ்சி போலீசார் கைது செய்து விசாரணைக்காக கெடார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர் சிகிச்சையில் இருந்து வரும் அன்பு ஜூபின் இன்று காலை கைது செய்யப்பட்டார்
முன்னதாக, ஆசிரமத்தில் தங்கியிருந்து பின்னர் பணியாளராக மாறி வேலை செய்து வந்த பூபாலன். சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Sexual abuse, Villupuram