விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் அரங்கேறிய கொடூர சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகிறது. இந்த சம்பவங்கள் கேட்போரை நடுநடுங்க செய்கிறது.
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், போலீசார், கடந்த 10ஆம் தேதி அதிரடியாக ஆஸ்ரமத்தில் சோதனை நடத்தி உண்மையை கண்டறிந்தனர். தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் விசாரணையில் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் ஒருவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனது கணவரை விட்டுவிட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்துவிட்டேன். இங்கு ஊர் ஊராக சுற்றி திரிந்த போது, கடந்த 2019ஆம் ஆண்டு விழுப்புரம் வந்தேன். அப்போது அங்கு வந்த யாரோ ஒருவர் அடைக்கலமின்றி தனியாக இருப்பதை கவனித்து அன்பு ஜோதி ஆசிரமத்தில் விட்டு சென்றார்.
ஆசிரமத்தில் சமைக்கும் வேலைகளை செய்வேன், வேலை செய்ய தாமதமானால் ஆசிரமத்தின் உரிமையாளர் ஜூபின் மற்றும் அவரது மனைவி மரியா, மேலும் அங்கு வேலை செய்பவர்கள் தன்னை தனி அறையில் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்துவார்கள் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
மேலும், அவர் அளித்த சில தகவல்கள் போலீசாரையே பதைபதைக்க செய்தது. கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி ஆசிரமத்தில் இருந்து புதுச்சேரிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற ஜூபின் பேபி, நள்ளிரவு தன்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக தெரிவித்தார். இது குறித்து தனது ஆசிரம தோழியிடம் தெரிவித்தபோது, அவரும் தன்னை 4 முறை ஜூபின் பேபி வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இருவரும் ஒன்று சேர, ஜூபின் பேபி அவரது குடும்பத்தினருடன் ஊருக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பி சென்று கோவைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் இருவரையும் கண்டு பிடித்து மீண்டும் ஆசிரமத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் தப்பிக்காமல் இருக்க அவர்கள் வளர்க்கும் குரங்குகளை ஏவி கடிக்க விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜூபின் பேபி மற்றும் அவரது மனைவி, மேலும் ஆசிரம பணியாளர்கள் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Villupuram, Viluppuram S22p13