விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரத்தக்கறை படிந்த பாய், சங்கிலி, பிரம்புகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
குண்டலப்புலியூரில் கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி என்பவர் நடத்தி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் 15க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. விசாரணையில், பாலியல் வன்கொடுமை, மனித உரிமை மீறல் போன்றவை நடைபெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக, ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அங்கிருந்து முக்கிய ஆவணங்கள், சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஆகியவற்றை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக கைப்பற்றினர்.
இதனிடையே, ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 142 பேரில் 96 பேர் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். 16 பெண்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ள்ளனர்.
அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக டிஜிபி உத்தரவின்படி கற்பழிப்பு, விதிமீறல், காணாமல் போனது தொடர்பாக 4 வழக்குகளில் பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சோதனை நிறைவடைந்த பிறகு வெளியே வந்த சிபிசிஐடி எஸ்பி அருண் பாலகோபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்: குணநிதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBCID, Crime News, Local News, Villupuram