நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என விழுப்புரத்தில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும் என ஏற்கனவே உயர்க்கல்வித் துறை அறிவித்திருந்தது. இந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க 1,69,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலும் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரத்தில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாளை தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பிற்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவே நாளை தொடங்க இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது.
ALSO READ | பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த மாணவர்களை பயன்படுத்தக் கூடாது- பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் மாணவர்களின் நலன் கருதியும், மாணவர்களுக்கு ஏற்படும் வீண் சிரமங்களை கருத்தில் கொண்டும் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : குணாநிதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.