விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வெவ்வேறு கிராமங்களில் வசித்து வந்த 17 வயது சிறுவன் மற்றும் சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தனர். சிறுமி பெற்றோரை இழந்து அவரது உறவினர் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகிறார். இதனிடையே, இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் நேற்று (சனிக்கிழமை) இரவு விக்கிரவாண்டி அருகே உள்ள செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் சரமாரி தாக்கி அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளது. மேலும் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு 17 வயது சிறுமியை மூவரில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு வீடு திரும்பிய மாணவி நடந்த விஷயத்தை வீட்டில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் அச்சிறுமியையும் உடன் இருந்த மாணவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை சார்பில் 8 தனிப்படைகளை அமைக்கப்பட்டு தப்பியோடிய 3 பேர் கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லை" என்று தெரிவித்துள்ளார். காதலனை கத்தியால் குத்திவிட்டு 17 வயது சிறுமியான காதலியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Villupuram