வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் இயங்கி வரும் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக் குழு பெயரில் மோசடி நடந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்த புகாரின் பேரில் கூட்டுறவு சங்க தணிக்கை துறை அதிகாரிகள் வங்கியில் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 2018-19ம் நிதி ஆண்டு காலகட்டத்தில் மகளிர் சுய உதவி குழு பெயரில் போலி பயனாளிகள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி ரூ.97 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் உமா மகேஸ்வரியை விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது அவர் கைது செய்யப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தற்போது கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட வங்கிக் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உமா மகேஸ்வரி மகளிர் சுய உதவி குழுவில் உள்ளவர்கள் பெயரில் பண மோசடியில் ஈடுபட்டு அவர் மீது புகார் எழுந்தபோது, அவர் பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டு பணத்தை திருப்பி தருவதாகவும் ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - செல்வம்
உங்கள் நகரத்திலிருந்து(Vellore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.