வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் திருமலைவாசன்(22), இவர் வேலூர் மாநகர பகுதியில் சொமேட்டோ நிறுவனத்தில் உணவு சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணிக்கு காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உணவு சப்ளை செய்வதற்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த 3 பேர் அவரது பைக் மீது திடீரென மோதியுள்ளனர். இதில் நிலைகுலைந்துபோன திருமலைவாசன் அந்த பைக் ஆசாமிகளை தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது மற்றொரு பைக்கில் வந்த மேலும் 2 பேர் இவர்களுடன் சேர்ந்து திருமலைவாசனை திடீரென சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒரு கட்டத்தில் அவர் சுய நினைவை இழந்த திருமலைவாசன் தரையில் மயங்கி விழுந்தார். அப்போதும் விடாமல் அந்த கும்பல் அவரை தாக்கிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் அந்த கும்பலை விரட்டி திருமலைவாசனை அவர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தான நிலையில் இருந்த திருமலைவாசனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக காட்பாடியை சேர்ந்த பார்த்திபன் என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திருமலைவாசன் சுய நினைவு இல்லாமல் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், திருமலைவாசனை தாக்கிய மற்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : செல்வம் - வேலூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Vellore