திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுவது . இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
அதன்படி, வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும், மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் ஆழ்வார்களுடன் எழுந்தருளி அருள்புரிவார்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (22ஆம் தேதி) தொடங்குகிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை (23ஆம் தேதி) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்குகிறது.
அன்றைய தினம் நம்பெருமாள் காலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 7.15 மணி முதல் மதியம் 11.30 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணி முதல் 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறும். இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10ஆவது நாளான ஜனவரி மாதம் 1ஆம் தேதி, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோல அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அன்று நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல் பத்து அர்ச்சுன மண்டபம் வந்தடைவார்.
பின்னர், அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலுக்கு வருவார். பின்னர் திருக்கொட்டார பிரதட்சணம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் அடைவார். அதனைத் தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மறுநாள் ஜனவர் (2ஆம் தேதி) ராப் பத்து உற்சவத்தின் முதல்நாள் ‘வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.
அப்போது நம்பெருமாள் ரத்தினஅங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் திறப்பு தினமான ஜனவரி 2ஆம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திரு வாய்மொழித் திருநாள் தொடங்கும்.
Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?
பின்னர் ராப்பத்து ஏழாம் திருநாளான 8ஆம் தேதி நம் பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திரு நாளான 9ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் நாளான 11ஆம் தேதி தீர்த்த வாரியும், 12ஆம் தேதி நம்மாழ் வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடையும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Margazhi, Srirangam, Trichy, Vaikunda ekadasi