பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிபெண்ணை,மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத காரணத்தினால் அங்கிருந்த நர்ஸ் மேற்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரம் மேல கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (33). டிரைவர். இவரது மனைவி போதும்பொண்ணு (28). இவர்களுக்கு நித்திஸ்வரன் என்ற, 2 வயது ஆண் குழந்தை உள்ளான். மீண்டும் கர்ப்பம் தரித்த போதும்பொண்ணு, கடந்த மாதம், 30ம் தேதி காலை, 8 மணிக்கு பிரசவத்துக்காக மேல கல்கண்டார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, டாக்டர்கள் யாரும் இல்லாத நிலையில் அனுசுயா என்ற நர்ஸ் மட்டும் பணியில் இருந்துள்ளார். போதும் பொண்ணுவை பரிசோதித்த நர்ஸ், மதியம், 2.30 மணியளவில் மேற்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஆம்புலன்ஸில் போதும் பொண்ணுக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது.
மயங்கிய நிலையில், திருச்சி மருத்துவமனை கொண்டு வரப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியில் மயக்கமுற்ற போதும்பொண்ணு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தையை தனது வீட்டருகில் அடக்கம் செய்த சக்திவேல், 'மேலகல்கண்டார் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையமே தனது மகன் இறப்புக்கு காரணம். தனது குழந்தைக்கு ஏற்பட்ட நிலை மற்ற யாருக்கும் ஏற்படக் கூடாது' என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்த பதிவுகள், திருச்சி மாநகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.