நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ள கமலஹாசன் கருத்துகளை காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக வெற்றி தான். இந்த தீர்ப்பு ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியை தராது. வேண்டுமானால், 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும். எடப்பாடி பழனிச்சாமி கையில் இரட்டைஇலை சின்னம்இருந்தால் ஒருபோதும் சோபிக்காது என தெரிவித்தார்.
மேலும், பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த தீர்ப்பு, ஓபிஎஸ்க்கு பின்னடைவாக கருத முடியாது. தீர்ப்பில் பின்னடைவை சந்தித்ததால், ஓபிஎஸ்-ஐ அமமுகவில் வந்து இணையுமாறு அழைக்க மாட்டேன். அது மனிதத் தன்மையும் அல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காரணம் பாஐக என்று சொல்ல மாட்டேன். அது, நீதிமன்றத்தை அவமதிப்பது போல ஆகிவிடும். ஆனால், கடந்த, 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே டெல்லி தான் (பாஜக) அதிமுகவை இயக்கி வருகிறது என தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெறும். ஆனால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக பலத்த தோல்வியை தழுவும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் அணியில் அமமுக அங்கம் வகிக்கும் என தெரிவித்தார்.
மேலும், நடிகர் கமலஹாசன் பேசுவதையெல்லாம் காமெடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது . அவர் நடிகராக இருந்து சிறந்த அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ளார். அதன் வெளிப்பாடுதான் விஸ்வரூபம் படம் வெளியானபோது ஜெயலலிதா நடவடிக்கை குறித்து அவர் பேசியது.
அன்றைய நாட்களில் கமலின் நிறுவனம் சார்பாக ஒரு பக்க விளம்பரத்தை கொடுத்து, ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தது, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவது அனைவரும் அறிந்தது தான். ஆனால் தற்போது மாற்றி பேசுகிறார். அவர் ஒரு அணியில் இருக்கிறார். பாராளுமன்றத்தில் சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காக அந்த அணிக்கு சாதகமாக பேசிக் கொண்டிருக்கிறார். மற்றபடி, சிறந்த அரசியல்வாதியாக கமலஹாசன் மாறிவிட்டார் என்பது நன்றாக தெரிகிறது" என்றார்.
மேலும், "ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு சமூகத்தை பற்றி சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிகிறது. எனவே அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய பேச்சுக்களை சீமான் தவிர்க்க வேண்டும்" என்று அறிவுரை வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy, TTV Dinakaran