பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நிறைவேறாத ஆசைகள், கனவு, லட்சியம் என பல விஷயங்கள் உண்டு. இந்திய ஆண்களின் சராசரி வருவாய் மிகவும் குறைவு, எனவே வாங்கும் சம்பளத்தில் பெற்றோர், பிள்ளைகள், குடும்பத்தின் தேவைகளுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நல்ல உணவகம் செல்வது, பரிசுப் பொருட்கள் வாங்குவது மற்றும் விலை உயர்ந்த ஆடைகளை அணிவது என தங்களுக்கான அனைத்து தேவைகளையும் சுருக்கிக் கொள்கிறார்கள்.
ஆண்களுக்கு எப்போதுமே அவர்களுக்கான ஆசைகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது பைக் அல்லது கார் தான். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவ்வப்போது வரும் லேட்டஸ்ட் மாடல் கார், பைக்குகளை பற்றி அறிந்து வைத்திருப்பார்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த குறிப்பிட்ட கார் அல்லது பைக்கை சொந்தமாக வாங்கி ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற கனவும் இருக்கும்.
மும்பையைச் சேர்ந்த 83 வயது முதியவரின் அப்படிப்பட்ட கனவு நிறைவேறியுள்ளது, மேலும் சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. அதற்கான காரணம் என்னவென தெரிந்து கொள்ளலாம். Humans of Bombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், மும்பையைச் சேர்ந்த 83 வயது முதியவர் தான் முதன் முறையாக புதிய கார் வாங்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். வாழ்நாள் முழுவதும் தன்னால் முடிந்த அளவிற்கு குடும்பத்திற்காக உழைத்தவர், அதன் மூலம் கிடைத்த சம்பளத்தை குடும்பத்தினரின் நலன் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவிற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.
பணத்தை தேவையில்லாமல் செலவழிக்க கூடாது என்பதால் செகண்ட் ஹேண்ட் கார்களை மட்டுமே வாங்கி உபயோகித்து வந்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு, அவர் மற்றொரு இரண்டாவது கார் வாங்க நினைத்த போது, மீண்டும் பழைய காரை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் இந்த முறை முதியவரின் பிள்ளைகள் அவரை புதிய கார் வாங்க ஊக்கப்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் முதியவரின் குடும்பத்தினர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளனர். முதியவர் விடாப்பிடியாக பழைய கார் வாங்க நினைத்ததால், அவரது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் இணைந்து அவருக்கு ஒரு புதிய காரை புக் செய்தனர்.
Also Read : மேஜிக் செய்து குரங்கை அசரடித்த இளைஞர் - வீடியோ
கடந்த ஜனவரி 16ம் தேதி அன்று பேரனின் 25வயது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஒட்டுமொத்த குடும்பமும் ஓட்டலுக்கு புறப்படுவதற்காக கார் பார்க்கிங்கிற்கு சென்ற போது, அங்கு முதியவருக்கு ஒரு ஸ்பெஷல் ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. ஆம், அவர் நீண்ட நாட்களாக வாங்க ஆசைப்பட்ட ‘பிராண்ட் நியூ கார்’ அவருக்கு அங்கு காத்துக்கொண்டிருந்தது. காரை பார்த்த முதியவர் மிகுந்த உற்சாகமடைந்தார். பேரனின் பிறந்தநாளோடு, கார் வாங்கியதையும் கொண்டாடும் விதமாக அங்கேயே கேக் வெட்டி குடும்பத்தினர் குதூகலப்படுத்தியுள்ளனர்.
புதிய கார் வாங்கியது குறித்து முதியவர் கூறுகையில், “
குழந்தைக்கு புதிய பொம்மை கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை உணர்கிறேன். அனைத்து இடங்களுக்கும் எனது புதிய காரை ஓட்டிச்செல்கிறேன். வார, வாரம் எனது மகள் வீட்டிற்கு இந்த காரில் தான் சென்று வருகிறேன். அடுத்த மாதம் நண்பர்களுடன் காரில் லோனாவாலாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்” என புன்னகை பூத்த முகத்துடன் பகிர்ந்துள்ளார். 83 வயதில் முதியவருக்கு கிடைத்த இந்த மகிழ்ச்சியான தருணம் மக்களின் இதயங்களை கவர்ந்திழுத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 நாட்களிலேயே அந்த வீடியோவை 1.3 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.