வெயிலோ அல்லது
மழையோ நாள் முழுவதும் சாலையில் நின்று கொண்டு வாகனங்களை ஒழுங்குமுறை செய்யும் சவால் மிகுந்த பணி தான் போக்குவரத்து காவலர்களின் பணியாகும். ஆனால், இதையெல்லாம் தாண்டி, வீடற்ற சிறுவனுக்கு ஆசிரியராக போக்குவரத்து காவலர் ஒருவர் உதவி செய்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கொல்கத்தா மாநகர தென்கிழக்கு மண்டல போக்குவரத்து காவல் துறையில் பணியாற்றி வருபவர் செர்கியாந்த் பிரகாஷ் கோஷ். இவர் சிறுவனுக்கு பாடம் எடுக்கும் காட்சியை, ஊடகவியலாளர் ஒருவர் படம் பிடித்துள்ளார். அதில், வீடின்றி சாலையோர நடைபாதையில் வசிக்கும் சிறுவன் புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருக்க, எதிரே சிறு குச்சியை கையில் வைத்துக் கொண்டு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் இவர். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
காவல் துறை விளக்கம்
சிறுவனுக்கு பாடம் எடுக்கும் பழக்கம் காவலருக்கு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கொல்கத்தா மாநகர காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “தெற்கு கொல்கத்தாவின் பாலிகஞ்ச் ஐடிஐ பகுதியில், பணி முடித்துச் செல்லும்போது சிறுவனையும், அவனது தாயாரையும் அடிக்கடி பார்த்திருக்கிறார் இந்தக் காவலர். சிறுவனின் தாயார் சாலையோர உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில், அந்த வீடற்ற குடும்பத்தின் நண்பராக காவலர் பிரகாஷ் கோஷ் மாறிவிட்டார்.
வீடற்ற நிலையில், அவர்கள் நலிவடைந்து வாழுவதைக் கண்டு மனம் உருகினார் அவர். இதற்கிடையே, மகனின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்ற நோக்கில் மிகுந்த போராட்டங்களுக்கு இடையே அந்தச் சிறுவனை அரசுப் பள்ளியில் அவரது தாயார் சேர்த்தார்.
Read More : ’சாக்லெட்’ வாங்க இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச சிறுவன் - கைது செய்த பாதுகாப்பு படை
மிகக் கடுமையான வறுமையை உடைத்து எறிந்து, இந்த உலகில் தன் மகன் தடம் பதிப்பார் என்று அந்தத் தாய் நம்புகிறார். இந்நிலையில், தனது மகனுக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்து வருகிறது என்று காவலரிடம் சிறுவனின் தாயார் முறையிட்டார். இதைத்தொடர்ந்து சிறுவனின் கல்விக்கு வழிகாட்டுவதாக அவர் உறுதியேற்றார். தற்போது அந்தச் சிறுவன் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
பணிக்கு மத்தியில் வழிகாட்டுதல்
போக்குவரத்து காவலருக்கான பணியை செய்யும் அதே வேளையில் சிறுவனை எப்போதும் தன்னுடைய கண்காணிப்பில் வைத்துள்ளார் காவலர் பிரகாஷ் கோஷ். வீட்டுப் பாடங்கள் செய்வதை கவனிப்பது, சிறுவனின் வாசிப்பு பிழைகள், உச்சரிப்பு பிழைகள் ஆகியவற்றை திருத்துவது, அழகாக எழுதுவதற்கு பழக்குவது போன்ற பயிற்சிகளை காவலர் வழங்கி வருகிறார்.
இறுக்கமான காவல் சீருடை காரணமாக தரையில் அமர்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது என்ற நிலையில், அவர் நின்று கொண்டே பாடம் எடுப்பதாக காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அவரது இந்த கருணை கொண்ட குணத்தை ஏராளமான நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.