அமெரிக்காவில் ஒரு உணவகத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை, அங்கு உணவருந்த வந்த போலீஸ் தம்பதி விரட்டி பிடித்த காட்சிகள் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லூயில் வில்லே பகுதியில் அமைந்துள்ளது, 'ரைசிங் கேன்ஸ் சிக்கன் ஃபிங்கர்ஸ்' உணவகம். இந்த உணவகத்தில், கடந்த சனிக்கிழமை இரவு புதிதாக திருமணமான போலீஸ் தம்பதியினர் சேஸ் மற்றும் நிக்கோல் ஆகியோர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் லூயிஸ்வில்லி மெட்ரோ காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர். அப்போது ஓட்டலுக்குள் வந்த முககவசம் அணிந்த நபர் ஒருவர், கேஷ் கவுன்டரில் இருந்த பெண்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
முகமூடி அணிந்து கொண்டு உணவகத்திற்குள் நுழைந்த அந்த நபரை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த போலீஸ் தம்பதி கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் கோவிட் நோயிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நபர் முகமூடியை அணிந்திருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கவுண்டருக்குப் பின்னால் இருந்த ஊழியர்கள் அர்களது கைகளை உயர்த்தி அலறிய போது என்ன நடக்கிறது என்பதை போலீசார் புரிந்து கொண்டனர்.
உடனடியாக சூதாரித்துக்கொண்ட போலீஸ் தம்பதி, ஒரே நேரத்தில் எழுந்து தங்கள் துப்பாக்கிகளை பிடித்தவாறு அந்த கொள்ளையனை பிடிக்க முயன்றனர். போலீசார் துப்பாக்கியுடன் ஓடிவருவதை பார்த்த அந்த கொள்ளையன் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடினான். கொள்ளையனை துரத்திச் சென்ற போலீஸ் எலிசபெத் டவுன் காவல் துறை அதிகாரிகளின் உதவியோடு கைது செய்தனர். பிடிபட்ட அந்த நபரின் பெயர் ஜஸ்டின் கார்ட்டர் என்பதை லூயிஸ்வில்லி மெட்ரோ போலீஸ் தெரிவித்துள்ளனர்.
லூயிஸ்வில்லி மெட்ரோ காவல் துறையால் பேஸ்புக்கில் பகிரப்பட்ட கண்காணிப்பு காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், டேட்டிங்கில் இருந்த போதிலும் தங்கள் கடமையை சிறப்பாகச் செய்ததற்காக அந்தத் தம்பதியினரைத் லூயிஸ் வில்லே காவல்துறை நிர்வாகம் பாராட்டியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள நிக்கோல் – சேஸ் தம்பதி தங்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்களாகியிருக்கும் என்றும், உண்மையில் அந்த கொள்ளையன் உள்ளே நுழைந்தபோது நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். இதுதான் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டோம். பின்னர் நாங்கள் செய்ய வேண்டியதை செய்தோம் என தெரிவித்தனர்.
மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே போலீசார் சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர். அந்த வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அது பலரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.