பொதுவாக ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை அரசு இயந்திரம் ரகசியமாகவே வைத்திருக்கிறது என்றாலும், உங்களுக்கு நெருக்கமான உறவுகள் அல்லது நண்பர்களில் யாரேனும் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருந்தால், அது குறித்து உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அத்தகைய நபர்களுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் நீங்கள் சகஜமாக பழகுகிறீர்களா.? இல்லை சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் மூடநம்பிக்கை மற்றும் அச்ச உணர்வு காரணமாக அவர்களிடம் இருந்து விலகியிருக்கிறீர்களா.?
இத்தகைய மூட நம்பிக்கைகள் மற்றும் அச்ச உணர்வு போன்றவற்றை விலக்கி, ஹெச்ஐவி பாதித்த நபர்களுடன் வெகு இயல்பாக மற்ற நபர்களிடம் பழகுவதைப் போலவே நாம் பழகலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் டாக்டர் கலோல் கோஷ். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகே பாலிகுங்கே பகுதியில் ‘கஃபே பாசிடிவ்’ என்ற பெயரில் காஃபி ஷாப் திறந்திருக்கிறார் இவர். அடிப்படையில் குழந்தைகள் நல ஆர்வலராகவும் கலோல் கோஷ் செயல்பட்டு வருகிறார்.
ஹெச்ஐவி பாதித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு :
பொதுவாக ஹெச்ஐவி பாதித்தவர்கள் என தெரிய வந்தால், சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்து விடுகிறது. அவர்களுடன் நெருங்கிப் பழகினால் நமக்கும் அந்த பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. இந்த மூடநம்பிக்கையை போக்கும் வகையில் ‘கஃபே பாசிடிவ்’ ஷாப்பில் ஹெச்ஐவி பாதித்தவர்களை பணியமர்த்தியுள்ளார். அங்கு பணிபுரியும் 7 பணியாளர்களுமே இளம் வயதினர்.
அவர்கள் அனைவருமே ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக, இந்த நோய் பாதிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் ஆவர். ஹெச்ஐவி பாதித்தவர்கள் மற்றவர்களைப் போல சமூகத்தில் இணைந்து இயல்பான வாழ்க்கையை வாழுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியை கலோல் கோஷ் மேற்கொண்டுள்ளார்.
Also Read : அகதியாக வந்த குடும்பத்திற்கு நினைத்த பார்க்கமுடியாத உதவியை செய்த நபர்
இந்த காஃபி ஷாப்புக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இதேபோன்ற காஃபி ஷாப் செயல்பட்டு வருவது குறித்து தெரிந்து, அதன் மூலம் ஏற்பட்ட ஈர்ப்பின் எதிரொலியாக ‘கஃபே பாசிடிவ்’ ஷாப்-ஐ கலோல் கோஷ் திறந்துள்ளார்.
‘ஆனந்தகார்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பையும் கலோல் கோஷ் நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு சேவை செய்து வருகிறது.
முன்னதாக, ராமகிருஷ்ணா சாரதா மிஷன் மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார் கலோல் கோஷ். கடந்த 1988ஆம் ஆண்டில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சேவை இயக்கத்தில் இணைந்தார். பின்னர், ஐ.நா. அமைப்புடன் இணைந்து நேபாளத்தில் சேவையாற்றி வந்தார்.
Also Read : பெண்ணின் கூந்தலில் 84 நாட்களாக கூடு கட்டி வாழ்ந்த பறவை...
சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு பயிற்சி பட்டறையை யுனிசெஃப் உதவியுடன் நடத்தி வருகிறார் இவர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.