கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது வரையிலும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. குழந்தை இல்லாத இளம் பெண் கணவனை இழந்து மறுமணம் செய்து கொண்டால், அதனை அங்கீகரிக்கும் சமூகம், குழந்தையுடன் இருப்பவர்களின் மறுமணம் மீது விமர்சனங்களை வாரி வீசுவதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். சில சமயங்களில் குடும்பத்தினர் கூட பிள்ளைகளை காரணமாக காட்டி பெண்களுக்கு மறுமணம் செய்துவைப்பது கிடையாது.
இந்நிலையில் தனது தாய் 52 வயதில் மறுமணம் செய்து கொண்டதை முழு மனதோடு ஆதரித்த அவரின் மகன் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள பதிவு, இணையத்தில் வைரலாகி ஏராளமானோரின் வாழ்த்துக்களை குவித்து வருகிறது. 2013ம் ஆண்டு தனது 44 வயதில் கணவனை இழந்த பெண், கேன்சர், கொரோனா தொற்று என பல உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தனது 52வது வயதில் குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார்.
இதையும் படியுங்கள் : கூகுளில் நீங்கள் பல கேள்விகளை கேட்டிருக்கலாம் - இண்டர்வியூக்கு வருபவர்களிடம் கூகுள் எப்படி கேள்வி கேட்கும் தெரியுமா?
கடந்த ஒருவாரத்திற்கு முன்பு, துபாயில் வசிக்கும் ஜிமீத் காந்தி என்பவர் தனது தாய், வயது, மரபு போன்ற பழங்கால காரணங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, 52 வயதில் தனக்கான காதலை தேடி பிடித்து திருமணம் செய்து கொண்டுள்ளதை லிங்டு இன் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், தனது தாய் காமினி காந்தி, 2013ம் ஆண்டு 44 வயதில் கணவனை இழந்தததாக குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு தனது அம்மாவிற்கு 3-ம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், பலமுறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், சுமார் 2 வருட போராட்டத்திற்கு பிறகு கேன்சரில் இருந்து மீண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கியவர் தூக்கி எறியப்படும் அதிர்ச்சி காட்சி
புற்றுநோய் சிகிச்சையில் இருந்த காமினி காந்தி டெல்டா வகை கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், தொற்றிலிருந்து மீண்டாலும் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கிறார். மகன் துபாயில் பணிபுரிவதால், காமினி காந்தி மும்பையில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த தனிமை அவருக்கு கூடுதல் மனச்சுமைகளை கொடுத்துள்ளது. இதனால் தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க எண்ணினார். நீண்ட கால குடும்ப நண்பரான கிரிட் பதியாவை மறுமணம் செய்ய முடிவெடுத்தார். இதற்கு மகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் சம்மதிக்க காமினி காந்தி தனது 52வது வயதில் மறுமணம் செய்து கொண்டார். காமினி காந்திக்கும், அவர் விரும்பிய குடும்ப நண்பரான கிரிட் பதியவுக்கும் பிப்ரவரி 14ம் தேதி அன்று மும்பையில் திருமணம் நடந்துள்ளது.
இதையும் படியுங்கள் : குலாப்-ஜாமூன் புரோட்டா : இணையத்தில் வைரலாகும் வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
இதுபற்றி ஜிமீத் காந்தி தனது பதிவில், “இந்திய சமூகம் சுமத்தும் அனைத்து களங்கங்கள், தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து தனக்கான அன்பை தேடிக்கொண்டார். தான் விரும்பும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்” என தனது அம்மாவின் மறுமணத்தை மகிழ்ச்சியோடு சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
தனது அம்மாவை மறுமணம் செய்து கொண்ட நபர் பற்றி ஜிமீத் கான் கூறுகையில், “என் அம்மா கிரிட் பதியா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் எங்ளுடைய நீண்ட கால குடும்ப நண்பர். அவர் மிகவும் அன்பானவர் மற்றும் அவர்களது காதல் சுயநலமற்றது. நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்களுடைய எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.