ஆயுர்வேத காலம் தொட்டு தற்போதைய நவீன தொழில்நுட்பம் வரை வேகமாக முன்னேறி வரும் துறைகளில் மருத்துவ துறையும் ஒன்று. கொரோனா போன்ற கொடூர வைரஸுக்கு சில மாதங்களில் மருந்து கண்டுபிடிப்பதில் தொடங்கி மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது வரை மருத்துவ உலகில் தினந்தோறும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. அப்படி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக கிடைத்தது தான் ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறை. ஆனால் இதில் வயதை பொறுத்து தான் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படும்.
7 தம்பதிகளில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உள்ள இந்தியா போன்ற நாடுகளில் ஐ.வி.எஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது, மாறி வரும் வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் போன்ற காரணங்களால் கரித்தரிக்க முடியாமல் போன இளம் தம்பதிகளுக்கே ஐ.வி.எஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது, ராஜஸ்தானைச் சேர்ந்த வயதான தம்பதி ஐ.வி.எஃப் சிகிச்சை மூலமாக குழந்தை பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பகுதியில் வசித்து வரும் வயதான தம்பதி, திருமணமாகி 54 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். கோபி சிங் மற்றும் சந்திரவதி தம்பதியினருக்கு IVF (In Vitro Fertilisation) தொழில்நுட்பம் மூலம் முதல் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை பேறு இல்லாத நிலையில் உறவினர் மூலமாக செயற்கை கரித்தரித்தல் குறித்து தெரிந்து கொண்டுள்ளனர். அதனையடுத்து ஐவிஎஃப் முறையில் கருத்தரிக்க முடிவெடுத்த இருவரும், ஆழ்வாரில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை மேற்கொண்டனர்.
அங்கு முதல் இரண்டு முறை கர்ப்பம் தரிப்பது தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முயற்சியில் தம்பதிக்கு கரு நல்ல விதமாக வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. தற்போது திருமணமாகி 54 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் தம்பதி அழகிய ஆண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்துள்ளனர். டாக்டர் பங்கஜ் குப்தா கூறுகையில், “நாடு முழுவதும் இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகள் மிகக்குறைவாக உள்ளனர். அதனடிப்படையில் பார்த்தால் ராஜஸ்தானை சேர்ந்த 75 வயது ஆணும், 70 வயது பெண்ணும் செயற்கை கருவுறுதல் முறையில் முதல் குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.
Also Read : மலைப்பாம்பிடம் அகப்பட்ட நாயை உயிரை பணயம் வைத்து மீட்ட சிறுவர்கள் - இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
தாயின் வயது முதிர்ச்சி காரணமாக மருத்துவர்கள் பிரசவத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். ஆனால் அனைத்தும் சுமூகமாக நடந்து சந்திரவதி ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.பல வருடங்களுக்குப் பிறகு பெற்றோர் ஆனதால் வயதான கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 70 வயதுக்கு மேலான பிறகும் மருத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிக்கு சோசியல் மீடியாவிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IVF Treatment, Rajastan, Trending