செல்ல பிராணிகள் என்றால் சிலருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். அதற்காகவே வாழ்பவர்களும் உள்ளனர். இப்படி செல்ல பிராணிகள் மீது அதீத அன்பு கொண்ட மனிதர்கள் மிக சிலரே. அவர்கள் செல்ல பிராணிகளுக்காக தங்களின் உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு அதிக பாசம் வைத்திருப்பார்கள். இப்படியொரு வினோத மனிதரின் கதை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவை சேர்ந்த ஜோ என்பவர் தனது நாய்களுக்காக 40 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடம்பரமான பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.
இந்த பங்களா-கம்-டாக் ஹவுஸில் ஒருவர் கற்பனை செய்ய முடியாத அனைத்து வசதிகளும் உள்ளன. ஜோ தான் வளர்க்கும் 10 நாய்களுக்காக இந்த பங்களா வீட்டை கட்டி உள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சூயி கவுண்டியில் ஆடம்பரமான நாய் வீட்டைக் கட்ட இவர் மூன்று ஆண்டுகள் செலவிட்டுள்ளார். இந்த நாய் பங்களாவில் ஒரு பாரம்பரிய கொட்டில் மட்டுமல்லாமல், ஏர் கண்டிஷனர்ஸ், ஒரு டிவி செட், ஒரு தண்ணீர் விநியோகம் செய்ய கூடிய சாதனம், டிரையர், கழிப்பறை மற்றும் ஒரு லிஃப்ட் கூட உள்ளது.
ஜோ தனது நாய்களுக்கு ஃபிலிம் புரொஜெக்டர், ஸ்லைடுகள், ஊஞ்சல், நீச்சல் குளங்கள், டிஸ்கோ அறை, மினி பெர்ரிஸ் சக்கரம், பொம்மை கார்கள் மற்றும் இந்த எஸ்டேட்டிற்குள் ஒரு சிறிய சில்லறை விற்பனை கூடத்தையும் கூட பொறுத்தி உள்ளார். இது போன்று இவர் ஏராளமாக செலவு செய்ததால் இவர் ஒரு அதிபரின் மகன் என்று பலர் நினைத்தனர். ஆனால் ஜோ அப்படிப்பட்டவர் இல்லை என்று மறுத்துள்ளார். இவர் நண்டு தொழில் செய்து வருவதாகவும், தனக்கு 33 வயதாவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் தனது செல்வத்தை நாய்களுக்காக அதிகம் செலவழித்ததற்குக் காரணம், நாய்கள் மீது இவருக்கு உள்ள மிகுந்த பிரியம் தான் என்று கூறியுள்ளார்.
அதே போன்று தனது செல்ல பிராணிகளுக்காக ஒரு ஆடம்பரமான பங்களாவை கட்டுவதே தனது இலக்காக உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்த கனவு அவருக்கு சிறுவயதிலிருந்தே இருந்ததாகவும் ஜோ கூறினார். பெரும்பாலான மக்கள் தங்கள் பணத்தை ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்காக செலவழிப்பதைப் போலல்லாமல், இவர் தனது நாய்களுக்காக பணம் செலவழிக்கிறார். அதே போன்று தனக்காகவும் பெரிதாக இவர் செலவு செய்வதில்லை. Douyin என்கிற குறுகிய வீடியோ தளத்தில் இவருக்கு 8.5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
Also Read : நாயை காப்பாற்ற திருமண கொண்டாட்டத்தை தூக்கிப்போட்ட நபர் - வைரல் வீடியோ!
முதலில் இந்த நாய் பங்களா வடிவமைப்பை மிகவும் எளிமையானதாக கொண்டிருந்தார். ஆனால் அவரின் ஃபாலோவர்ஸ் பல மாற்றங்களை அவருக்கு கூறினார்கள். அதன் பின் அந்த வீட்டிற்கு 200-க்கும் மேற்பட்ட மாற்றங்களைச் செய்தார். ஆன்லைனில் ஃபாலோவர்ஸ் கூறிய அனைத்து மாற்றங்களையும் ஜோ செய்தார், மேலும் பலவித வீட்டு உபகரணங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றையும் இதற்கு பிறகு தான் சேர்த்து கொண்டுள்ளார்.
இவர் தனது செல்ல பிராணிகளுக்கான பங்களாவை கட்டிய பிறகு பூல் பார்ட்டியை ஏற்பாடு செய்தார். அங்கு அவர் நாய்களுக்கு பிகினி அணிவித்து நீச்சல் குளத்தில் விளையாட செய்தார். இவர் நாய்கள் மீது காட்டும் அன்பைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்துள்ளனர், மேலும் பலர் தங்கள் வாழ்க்கையில் இந்த வசதிகளைப் பெறவில்லை என்பது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.