நிதி நெருக்கடி காரணமாக சுமார் பதினெட்டாயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் அதிரடி மற்றும் அதிர்ச்சி முடிவை அமேசான் நிறுவனம் எடுத்திருக்கிறது. இது பலரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஆன்லைனில் கடை பரப்பி கோடி கோடியாக குவிக்கும் ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான்களில் முக்கியமான நிறுவனம் அமேசான். அமேசான் தளத்தில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம். ஆன்லைன் கரம் பரப்பி பட்டி தொட்டியிலும் கூட பொருட்களை டெலிவரி செய்யும் திறன் படைத்து ஆண்டுக்கு உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்கிறது அமேசான் நிறுவனம். பின் முதல் பிளேன் வரை கிடைக்கும் அமேசான் கடையில். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ளது.
இப்படி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரம்மாண்டமான இந்த நிறுவனம் தற்போது எடுத்திருக்கும் ஒரு முடிவால் அதன் ஊழியர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஆம், அமேசான் நிறுவனம் சுமார் பதினெட்டாயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப உள்ளது. நிதி நெருக்கடியால் இந்த சோகமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜெஸி கூறியுள்ளார்.ஆட்குறைப்பு தொடர்பாக நேற்று அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பத்தாயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப உள்ளதாக ஏற்கனவே அந்தநிறுவனம் அறிவித்திருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 18,000 உயர்ந்திருக்கிது. வேலை இழப்பு எண்ணிக்கை ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலை இழக்கும் தங்கள் ஊழியர்களுக்கு தேவயைான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக ஆன்டி ஜெஸி கூறியிருக்கிறார். யாரெல்லாம் வேலை இழக்கிறார்கள் என்கிற விபரங்கள் ஜனவரி 18 ஆம் தேதி முதல் வெளியிடப்படும் என்றும் அறிவித்திருக்கிறது அமேசான் நிறுவனம்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான பெரிய நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக தங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பின. பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்தன. ஆனால் தற்போது ஆண்டுக்கு ஆண்டு தொழிலில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையிலும் கூட ட்விட்டர், அமேசான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வது உலகளாவிய் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்திருக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
அண்மையில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனே ஏராளமான ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இப்போது இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை ஆன்லைன் ஜாம்பவான் அமேசான் எடுத்திருக்கிறது. கொரோனா காலத்தில் அதாவது 2020ஆம் ஆண்டு அமேசான் நிறுவனம் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தியது. இரண்டே ஆண்டுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.