உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, ஆக்கிரமிக்க தொடங்கிய பிறகு 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அதுபோல நாட்டை விட்டு விட்டு வெளியேறியவர்களில் இந்த 11 வயது சிறுவனும் ஒருவர். நாட்டை விட்டு வெளியேறியபோது ஒரு ஃபோன் நம்பர் மட்டுமே அந்தச் சிறுவனிடம் இருந்தது.
11 வயதான இந்த சிறுவனின் பெயர் ஹாஸன் பிஸேக்கா. முன்னதாக, ஸேபோரிழியா நகரில் இருந்து ஸ்லோவேகியா நோக்கி சென்று கொண்டிருந்த இந்தச் சிறுவன், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தான். முதுகில் பையுடனும், கையில் எழுதப்பட்டிருந்த ஃபோன் நம்பருடனும் சுமார் 1,000 கி.மீ. கடந்து சென்றான். அதே சமயம், உக்ரைனில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த உறவினரைப் பார்த்துக் கொள்ளும் நோக்கில், சிறுவனின் பெற்றோர் நாட்டிலேயே தங்கி விட்டனர்.
எனினும், ஹாஸனின் தாயார், ஜூலியா பிஸேக்காவும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்று எப்படியோ தனது மகனை சந்தித்து விட்டார். இப்போது, ஹாஸன் மற்றும் அவனது 4 உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.
ஹாஸனின் தாயார் ஜூலியா பிஸேக்கா, கணவரை இழந்தவர். இருந்த போதிலும், தன் பிள்ளைகளை இத்தனை ஆண்டு காலமாக பாதுகாப்புடன் வளர்த்து வந்தவர். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரயிலில் பயணம் செய்வது கடினமான காரியமாக இருந்தது. நூற்றுக்கணக்கான நபர்கள் காரில் தப்பிச் சென்றனர். நாங்களும் ஏதோவொரு வகையில் தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. அதைச் செய்தால் தான் எங்கள் குடும்பம் ஒன்றுசேர முடியும் என்ற நிலை இருந்தது. எங்களிடம் இருந்த அனைத்தையும் இழந்து விட்டோம். ஆனால், நாங்கள் தற்போது நலமாக இருக்கிறோம்’’ என்று கூறினார்.
உக்ரைனை விட்டு வெளியேறும்போது, நாட்டின் எல்லையில் ஹாஸன் புன்னகைப்பது போன்ற படம் இதற்கு முன்பு வெளியாகி வைரல் ஆனது. அதன் மூலமாக கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஹாஸன் குடிகொண்டிருந்தான். ஹாஸனிடம் இருந்த ஃபோன் நம்பர் மற்றும் அவனது கையில் இணைக்கப்பட்டிருந்த குறிப்பு ஆகியவற்றை கொண்டு, அவனது குடும்பத்தை தொடர்பு கொண்டு, எல்லோரையும் ஒன்று சேர்த்து வைக்கும் வேலையை நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
Also Read : டிக் டாக் வீடியோ மூலம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய நபர்..
குடும்பத்தினருடன் இணைந்த பிறகு ஹாஸன் அதுகுறித்து ஊடகத்தினரிடம் பேசுகையில், “எதிர்காலம் குறித்து நான் எதுவும் நினைக்கவில்லை. இப்போது பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, எனது குடும்பத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று கூறினார். அதே சமயம், உக்ரைனின் நிலவரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஹாஸன் தெரிவித்தான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.