500 பவுண்டுகள் எடையுள்ள ஹேமர்ஹெட் சுறாவின் சடலம் ஃபோர்ட் லாடர்டேலுக்கு வடக்கே அமைந்துள்ள பொம்பனோ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
பூமியில் 71 சதவீத இடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இந்த கடல். தனது பரந்து விரிந்த நீர்பரப்பில் 94 சதவீத உயிரினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் உயிர்வாழ்கின்றன. கடல் மறைத்து வைத்திருக்கும் அற்புதங்களையும், வித்தியாசமான உயிரினங்களையும் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரும் அதே நேரத்தில், கடலில் வாழும் அரிதான உயிரினங்கள் இறந்து கரை ஒதுக்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. மனித இனம் செய்யும் தவறால் கடல் வாழ் உயிரினங்கள் கணிசமான அளவில் குறைந்து வருவதாகவும், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளால் கடல் மாசடைந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் தொடர்ந்து 20க்கும் அதிகமான கடன் டிராகன்கள் செத்து கரை ஒதுங்கி வருகின்றன. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் ஹாரிஸ் தீவில் உள்ள கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆண் திமிங்கலத்தின் வயிற்றில் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படி அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் மீள்வதற்குள் மற்றொரு துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 6ம் தேதி அன்று, தெற்கு புளோரிடாவில் உள்ள பொம்பானோ கடற்கரையில் 11 அடி நீளமுள்ள, சுமார் 500 பவுண்ட்கள் எடை கொண்ட ஹேமர்ஹெட் சுறா இறந்து கரை ஒதுங்கியது. அதன் சடலத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் பேரதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு விஞ்ஞானியும், அமெரிக்க சுறா கன்சர்வேன்சியின் நிறுவனருமான ஹன்னா மெட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பெண் சுறா கர்ப்பமாக இருந்ததை தெரிவித்துள்ளார். அதனால் தான் அந்த சுறா 500 பவுண்ட்கள் எடையிருந்ததாக தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட இனமான ஹேமர்ஹெட் சுறாவின் டிஎன்ஏ, தசை திசு மற்றும் சடலத்தை மெட் தனது குழுவுடன் ஆய்வு செய்துள்ளார். அப்போது அது கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த ஃபேஸ்புக் பதிவில், எனது குழுவைச் சேர்ந்தவர் சுறாவின் உடலை பரிசோதித்துக் கொண்டிருந்த போது, அதன் வாயில் கொக்கி இருப்பதாக கூறினார். இது பொதுவாக ஹேமர்ஹெட் சுறா போன்ற பெரிய சைஸ் உயிரினத்தை பிடிக்க பயன்படுத்தும் முறை. இந்த இன சுறாக்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடியவை. இதனால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என அவர் கணித்துள்ளார்.
மேலும் புளோரிடாவில் வேட்டையாடாமல், ஹேமர்ஹெட் சுறாக்களை கேட்ச் மற்றும் ரிலீஸ் நிகழ்விற்கு பயன்படுத்துவது சட்டப்பூர்வமானதாக உள்ளது. இருப்பினும் கொக்கிகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது அதில் சிக்கும் ஹேமர் ஹெட் சுறாக்களை விடுவித்தாலும், அவை பிடிபட்ட காரணத்தால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், இதனால் சுறா உயிரிழப்பது போன்ற அரிய நிகழ்வுகள் ஏற்படலாம் என்றும் மெட் தெரிவித்துள்ளார்.
மேலும் மெட் கூறுகையில் “ஆரோக்கியமான பெருங்கடல்கள் மற்றும் கடற்கரைகளை பராமரிப்பதில் சுறாக்களின் பங்கு மிக முக்கியமானது. ஹேமர் ஹெட் சுறாக்கள் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அவை நமது பெருங்கடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுச் சங்கிலியில் முக்கிய பங்காற்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.