50 வயதை கடந்த நெதர்லாந்து நாட்டு தோழிகள் 9 பேர் 18 வயது இளம் பெண்களை போன்று அதிவேகத்தில் சைக்கிள் ஓட்டி அசத்துகின்றனர்.
நெதர்லாந்து நாட்டு தலைநகர் ஆம்ஸ்டர்டம் நகரை சேர்ந்தவர் கரோலின் வேன்டிஸ் (வயது61), இவர் தன்னுடன் பள்ளிப் படிப்பு படித்த நெதர்லாந்து நாட்டு தோழிகள் 9 பேரை ஒன்றிணைத்து ஒரு கல்வி அமைப்பு ஏற்படுத்தி உலகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நாடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களின் வாழ்வாதார நிலைமை, அங்குள்ள குழந்தைகளின் கல்வி முறைகள் பற்றி விசாரித்து அடித்தட்டு நிலையில் உள்ள குழந்தைகளை தேடி கண்டுபிடித்து கல்வி உதவி செய்து வருகின்றனர். கரோலின் வேன்டிஸ் மற்றும் அவரது தோழிகள் என அனைவருக்கும் 50, 55, 60 வயதை கடந்தவர்கள்.
இவர்கள் அந்நாட்டில் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாவும், விஞ்ஞானிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களாகவும் உள்ளனர். நெதர்லாந்து தோழிகள் 9 பேருக்கும் திருணமாகி கணவர் மற்றும் மகன், மகள்கள், பேரக்குழந்தைகள் என ஒரு குடும்பமாக அவர்கள் அந்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடாக சென்று சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் தமிழகத்தை தேர்வு செய்த நெதர்லாந்து தோழிகள் சென்னை வந்தனர். பிறகு சென்னையில் இருந்து சைக்கிள் பயணம் மூலம் சென்றால்தான் மக்களின் வாழ்வாதார நிலைகளை அறியவும், பொழுதுபோக்கு மையங்களை கண்டுரசிக்க முடியும் என்று எண்ணிய தோழிகள் 9 பேரும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிள் பயணத்தை தொடங்கி, மாமல்லபுரம் வந்தனர்.
பிறகு மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி, சேலம் வழியாக 600 கிலோ மீட்டர் தூரத்தினை கடந்து மதுரையில் தங்கள் பயணத்தை முடிக்கின்றனர். அப்போது வழி நெடுகிலும் மக்களின் வாழ்வாதார நிலைகளையும், அவர்களின் குழந்தைகளின் கல்வி முறைகள் குறித்து அறிந்து அடித்தட்டு நிலையில், கல்வி பயில முடியாத வசதியற்ற ஏழை குழந்தைகளை கண்டுபிடித்து தாங்கள் உதவி செய்ய உள்ளதாகவும், மேலும் தற்போதுதான் முதல், முதலாக தமிழகத்திற்கு தாங்கள் சுற்றுலா வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமிழக மக்களின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றையும்தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், இங்கு தற்போது நல்ல தட்பவெப்ப நிலை நிலவுவதாகவும், இங்குள்ள சுற்றுலா தலங்களில் உள்ள புராதன சின்னங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ரசிப்பதற்கும், பார்ப்பதற்கும் மிக அழகாக உள்ளதாகவும், தமிழகம் வந்தது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் என்றும் நெதர்லாந்து தோழிகள் தெரிவித்தனர்.
நெதர்லாந்து தோழிகள் 10 பேரும் 50 வயதை கடந்தாலும் இவர்கள், வயது முதிர்ச்சி, உடல்வாகு போன்றவற்றை பார்த்து எங்களை எடைபோடாதீர்கள் என்றும், இன்றும் எங்கள் நாட்டில் கார், இரு சக்கர வாகனங்களை தாங்கள் உபயோகிப்பதில்லை என்றும், தினமும் அங்கு சைக்கிளை தான் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.இவர்கள் 18 வயது இளம்பெண்கள் போல் மிடுக்கான ஆடை அணிந்து சுறுசுறுப்பாக காணப்படுகின்றனர்.
ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டருக்கு சைக்கிள் ஓட்ட உள்ளதாகவும், தங்களுக்கு களைப்பு என்பதே வராது என்றும் தெரிவிக்கும் அவர்கள், எந்தவித நோய் நொடியும் இல்லாமல் வாழும் நாங்கள் எங்கள் உடல்நிலையை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் எங்கு சென்றாலும் ஓட்டல் உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் சைக்கிள் பயணம் மேற்க்கொள்ளும் நெதர்லாந்து பெண்களுடன் உணவுப்பொருட்கள், சிலிண்டர்கள், சமையல் கலைஞரும் நடமாடும் ஓட்டல்போன்று ஒரு வேனும் பயணத்தில் உடன் செல்கிறது. வழியில் ஏதாவது ஒரு விடுதியில் தங்கும் அவர்களுக்கு நடமாடும் சமையல் வேனில், இருந்து சமையல் கலைஞர் ஒருவர் இட்லி, பூரி, பொங்கல், தோசை என விதவிதமாக தமிழக உணவுகளை சமைத்து கொடுக்கிறார். அதனை தாங்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவதாக நெதலர்லாந்து தோழிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
பேரன், பேத்தி எடுத்த வயதில் உலகம் முழுவதும் சுற்றி வர முதிர்ச்சியடைந்த வயதிலும் அவர்களின் உடல் ஒத்துழைப்பு கொடுக்கிறது என்றால் அவர்களின் நம்பிக்கை, கவலையின்மை, உடல் பயிற்சி, உணவு முறை ஆகியவை என்றே கூறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Netherlands, Trending, Viral