திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி தென்கரை மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான ராணி . இவர் கடந்த ஜூன் மாதம் தனது கணவர் மற்றும் மகன் வெளியே சென்றிருந்த நிலையில் தான் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த சுமார் 50 வயது தாண்டிய நபர் ஒருவர் தான் தூரத்து உறவினர் என்றும், தங்கள் வீட்டு கிரகப்பிரவேசத்திற்காக பத்திரிக்கை வைக்க வந்திருப்பதாகவும் கூறி உரிமையுடன் பேசியுள்ளார். சந்தேகம் எழாதவாறு அவர் பேசுவதைப் பார்த்த ராணியும அவர் கூறுவதை நம்பி விட்டார்.
சிறிது நேரம் கழித்து கிரேகப் பிரவேசத்திற்காக மாவிலை தேவைப்படுகிறது பறித்து தருமாறு கேட்டுள்ளார். ராணி மாவிலை பறித்து விட்டு வருவதற்குள் பூட்டப்படாமல் இருந்த பீரோவில் இருந்து 5 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டார் அந்த மர்மநபர் அதிர்ச்சியடைந்த ராணி தனது கணவர் மூலம் பேரனம் போலீசாரிடம புகார் அளித்தார். நூதனத் திருடனைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். ராணி வீட்டில் சேகரிக்கப்பட்ட கைரேகைகளை வைத்து ஆய்வு செய்ததில் அது ஏற்கெனவே பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டிய முத்துக்கிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
இவர் தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாவிலை கேட்டு, ஒவ்வொரு வீடாக திருடி வந்ததால் இவர் பெயரே மாவிலை முத்துக்கிருஷ்ணன் என பிரபலமானது. தலைமறைவான மாவிலை முத்துக்கிருஷ்ணனை கடந்த 6 மாதங்களாக போலீசார் தேடி வந்தநிலையில், கும்பகோணம் அன்பு மருத்துவமனையில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. 58 வயதான மாவிலை முத்துகிருஷ்ணன் ரயில்வே துறையில் வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் வேலை இல்லாததால் வருமானமின்றி தவித்து வந்த இவர் ஒவ்வொரு ஊராகச் சென்று அங்கு அறை எடுத்து தங்கி வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் குறித்த விவரங்களை சேகரிப்பார்.
வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் நேரில் சென்று, நான் உங்கள் தூரத்து உறவினன் என்றும், உங்கள் கணவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம் என்று கூறி நம்பிக்கை ஏற்படுத்துவார். பின் வீட்டு விசேஷத்திற்கு மாவிலை வேண்டும் என்று கூறி அவர்களை திசை திருப்பி வீட்டில் உள்ள நகை உள்ளிட்ட பொருட்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பிடிபட்டவர் மீது கும்பகோணம், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவிலை முத்து கிருஷ்ணனிடமிருந்து மூதாட்டி ராணி வீட்டில் திருடிய ஐந்து சவரன் நகையையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
கோமாளி திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல, வீட்டு விஷேசத்திற்கு அழைக்க வந்திருப்பதாக நாடகமாடி நகைகளை கொள்ளையடித்து வந்த பலே திருடன் தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Tiruvarur