குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்தில் அந்த கிராம ஊராட்சியில் வரவு செலவு கணக்குகள் மற்றும் கிராம மக்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காசாங்குளம் கிராமத்தில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் காசாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். இதனிடையே இந்த ஊராட்சியில் பல ஆண்டுகளாக உயிரிழந்தவரை அடக்கம் செய்வதற்கு இடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லாத காரணத்தினால் ஆற்றில் இறங்கியும், விளைநிலத்தில் இறங்கியும் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு செல்ல வேண்டிய பாலம் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அந்த கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வருவதை கண்டித்து இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்களும், இளைஞர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : ராஜசேகர் -திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruvarur