மாமியார் கொடுமை தாங்கமுடியாமல் பெண் தற்கொலை - திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்
மாமியார் கொடுமை தாங்கமுடியாமல் பெண் தற்கொலை - திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்
திருவாரூர் கொலை வழக்கு
Tiruvarur : காளியம்மாளுக்கு திருமணம் நடந்து நான்கு வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறவிருக்கிறது.
மாமனார் மாமியார் அடித்து துன்புறுத்தியதால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லீலாவதி நகர் அக்கரை புதுத் தெருவைச் சேர்ந்த கூத்தாநல்லூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ரவி என்பவரின் மகன் சூர்யா என்கிற ரகுவிற்கும் நன்னிலம் அருகே உள்ள பில்லூரைச் சேர்ந்த குமாரசாமி மகள் காளியம்மாளுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்தநிலையில் காளியம்மாளுக்கும் அவரது மாமனார் ரவி மற்றும் அவரது மனைவிகளான சுமதி, லலிதா ஆகியோருக்கும் இடையே அடிக்கடி வீடு சம்பந்தமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து காளியம்மாள் வீட்டார் சமாதானம் பேசி ரவிக்கு சொந்தமான அந்த மாடி வீட்டை இரண்டாக தடுத்து முன்பக்கத்தில் காளியம்மாளும் அவரது கணவரும் தங்கியுள்ளனர். பின்பக்கத்தில் ரவி மற்றும் அவரது மனைவிகளான சுமதி, லலிதா ஆகியோரும் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை காளியம்மாளுக்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே வீடு சம்பந்தமாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காளியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளியம்மாள் தனது அண்ணன் முருகேசனிடம் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
முருகேசன் தான் நேரில் வந்து பேசிக் கொள்வதாக காளிம்மாளிடம் கூறியுள்ளார்.இருப்பினும் காளியம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காளியம்மாள் உயிரிழந்தார்.
இதனை அடுத்து காளியம்மாள் அண்ணன் முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் கூத்தாநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற் கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் காளியம்மாளுக்கு திருமணம் நடந்து நான்கு வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறவிருக்கிறது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.