திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இன்று வழக்கம் போல் பால் வாங்க சென்ற கிராம மக்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
வீட்டில் உள் பக்கம் தாளிட்ட கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்த கிராம மக்கள், வீடே ரத்த வெள்ளமாக காட்சியளிப்பதை கண்டு பதறியடித்து வெளியே வந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரவந்தவாடி கிராமத்தை சேர்ந்த பழனி(40) - வள்ளி(37) தம்பதியினர் வீட்டில் மாடு வைத்து பசும் பால் சப்ளை செய்து வந்தனர்.
இவர்களுக்கு 5 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் மற்ற 7 பேரும் குடும்பமாக வசித்து வந்தார்கள்.
மகிழ்ச்சியாக நாட்களை கழித்து வந்த இவர்களின் வாழ்க்கையில் எமனாக வந்தது மது பழக்கம். பழனி குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினசரி வள்ளியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் வள்ளியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடுமையாக தாக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் சென்ற பழனி, தனது இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்து மது அருந்தியுள்ளார்.
இதனை அறிந்த வள்ளி, பழனியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் வன்மமாக மாறி பழனி நெஞ்சில் பதிந்துள்ளது.
இந்த தகராறை அறிந்த பழனி மற்றும் வள்ளியின் உறவினர்கள் நேரில் சென்று இருவரையும் சமாதானம் செய்து கடந்த இரண்டு தினங்களாக அவர்களுடன் தங்கியுள்ளனர்.
நேற்று காலை அவர்கள் அனைவரும் ஊருக்கு திரும்பிய நிலையில் மீண்டும் தொடங்கியது தகராறு. நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த பழனி மீண்டும் மனைவி வள்ளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறும், மனதில் பதிந்த வன்மமும் சேர, ஆத்திரத்தில் பழனி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வள்ளியின் கழுத்தில் வெட்டியுள்ளார்.
இது போதாதென்று, தூங்கி கொண்டிருந்த 5 குழந்தைகளையும் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். அனைவரும் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து விட்டு பூஜை அறைக்கு சென்ற பழனி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் வீட்டிற்கு சென்ற அக்கம்பக்கத்தினர், 9 வயது சிறுமிக்கு மட்டும் உயிர் இருப்பதை கண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் 6 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆறாத வடுவாக பதிந்துள்ளது. பழனி வீட்டின் முன்பு குவிந்த கிராம மக்கள் கதறி கதறி அழுகும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை பதற செய்கிறது. தினசரி வாழ்க்கையை கடந்து வந்த ஒட்டு மொத்த கிராம மக்களுக்கும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியையே அளித்துள்ளது.
கிராமத்திற்குள் நுழைந்தாலே அவர்களின் மரண ஓலம் மட்டுமே கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கொலை சம்பவம் அவர்களின் மனதை வருட செய்துள்ளது. பிஞ்சு குழந்தைகள் உட்பட குடும்பத்தையே கதற கதற கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சைகோ தந்தையின் சம்பவம் தற்போது ஒட்டு மொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengam, Crime News, Local News, Murder, Tiruvannamalai