திருவண்ணாமலை அருகே 80 ஆண்டுகளுக்கு பின் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் அறநிலைத்துறைக்கு சொந்தமான முத்து மாரியம்மன் கோயிலுக்குள் அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்களை கடந்த 80 ஆண்டுகளாக அனுமதிக்காமல் இருந்தனர். சமீபத்தில் பொங்கல் திருநாளன்று இந்த முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ஒரு நாள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்கள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பட்டியலின மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு இது குறித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், தங்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்ததில், 80 ஆண்டு காலமாக கோயிலுக்குள் அனுமதிக்காதது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று கிராமத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள் உடன்படாததால் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லையென்றால் கோயிலை பூட்டி சீல் வைக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என போலீசாரின் புடை சூழ பட்டியலின மக்கள் 80 ஆண்டுகளுக்கு பிறகு மாலை, அபிஷேக பொருட்களுடன் கோயிலுக்குள் சென்று மகிழ்ச்சியாக சாமி தரிசனம் செய்தனர். பிறகு அம்மனுக்கு பொங்கல் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dalit, Local News, Tiruvannamalai