திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ். இவர் தான் ஆசிரியராக பணிப்புரிவதாக பொய் சொல்லி விழுப்புரம் மாவட்டம் பெரியவலசை கிராமத்தை சேர்ந்த ஜெயபாரதியை கடந்த 2017ம் ஆண்டு 16 சவரன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்தார். கடந்த 5 ஆண்டுகளாக நரேஷ் எந்த வேலைக்கும் போகாமல் குடிபோதையில் வரதட்சணை கேட்டு அடிக்கடி ஜெயபாரதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நரேஷ் அவரது அம்மா, அக்கா ஆகியோருடன் இணைந்து ஜெயபாரதியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி ஜெயபாரதியை மாட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனிடையே, ஜெயபாரதி தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நரேஷ், ஜெயபாரதியின் தம்பி தட்சிணாமூர்த்திக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி தட்சிணாமூர்த்தி அவரது அம்மா, அப்பா மற்றும் உறவினர்கள் ஓலைப்பாடி கிராமத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது ஜெயபாரதியின் உடலை நரேஷ் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஜெயபாரதியின் தந்தை, தாய், தம்பி மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஜெயபாரதியின் உடலை பார்த்தபோது ஜெயபாரதியின் முகம், தாடை, வாய் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டும், தாடை வீக்கமாக இருந்ததை கண்டும் சந்தேகம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் வேட்டவலம் காவல் நிலையத்தில் இது கொலை வழக்காக பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நரேஷ் அவரது அக்கா, அம்மா ஆகிய மூவரும் இதுவரை வந்து ஜெயபாரதியின் உடலை பார்க்காமல் கிராமத்திலும் இல்லாமல் தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளனர். இந்நிலையில் ஜெயபாரதியின் தந்தை தாய் மற்றும் அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், கொலை வழக்காக பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வரும் காவல்துறையினரை கண்டித்தும் நரேஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரியும்,
திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது மகளை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி தரையில் புரண்டு அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், இதுவரை காவல்துறையினர் நரேஷ் அவரது அம்மா, அக்கா 3 பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் காவல்துறையினரும், வருவாய்த் துறையும் கொலையாளிக்கு துணையாக இருப்பதாக கருதி 50க்கும் மேற்பட்டோர் தரையில் புரண்டு அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். வரதட்சணை கேட்டு மகளை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்யும் வரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயபாரதியின் உடலை வாங்கப் போவதில்லை என்று தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் வரதட்சணை கேட்டு அடிக்கடி ஜெயபாரதியை அடித்து துன்புறுத்துவதாக வசந்தா திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நரேஷை அழைத்து மிரட்டி இனி வரும் காலங்களில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பிய நிலையில் நேற்று மீண்டும் குடிபோதையில் நரேஷ் ஜெயபாரதியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொடூரமாக தாக்கி கொலை செய்து தூக்கில் மாட்டி விட்டு தப்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நரேஷிற்கு முதல் திருமணம் நடைபெற்று மனைவி நரேஷின் நடவடிக்கை சரியில்லாததால் விவாகரத்து பெற்று சென்றுள்ளதை மறைத்துடன், 2வதாக ஜெயபாரதியை திருமணம் செய்து குடிபோதையில் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : சதிஷ் - திருவண்ணாமலை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Tiruvanamalai