திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ள ஒரு உயர் அழுத்த மின்சார டவர் மீது சிறுவன் ஒருவன் ஏறி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக பொதுமக்களிடம் மிரட்டல் விடுத்தான். இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இந்நிலையில், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அந்த சிறுவனை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவன் கிழே இறங்க மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்தான்.
இந்நிலையில், பலமுறை அவனை கீழே இறங்க சொல்லியும் அவன் இறங்காததால் தீயணைப்பு துறையினர் லாவகமாக அவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி மெதுவாக அவனை கீழே கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியதில் அந்த சிறுவன் மோரை நியூ காலனி பகுதியை சேர்ந்த தயாளன் என்பதும், திருமுல்லைவாயலில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்துள்ளது.
மேலும் அவன் சரிவர படிக்காததால் அவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். அவன் தனக்கு செல்போன் வாங்கி தரவேண்டும் என பலமுறை பெற்றோரிடம் கேட்டுள்ளான். ஆனால் அவர்கள் வாங்கி தராததால் ஆத்திரத்தில் மின் கோபுரம் மேல் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவனது பெற்றோரை வரவழைத்து சிறுவனை எச்சரித்து அவர்களிடம் பத்திரமாக அனுப்பி வைத்தனர். செல்போன் வாங்கி தராத ஆத்திரத்தில் டவரில் ஏறி சிறுவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : கன்னியப்பன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Avadi, Crime News, Local News, Thiruvallur