முகப்பு /செய்தி /திருப்பூர் / திருப்பூர் தண்டவாளத்தில் பீகார் இளைஞரின் சடலம்... காவல் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்..!

திருப்பூர் தண்டவாளத்தில் பீகார் இளைஞரின் சடலம்... காவல் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்..!

பிகார் இளைஞர்

பிகார் இளைஞர்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை  மற்றும் அதனை சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பலர் சொந்தமாக கடை நடத்தி வருகின்றனர்.  பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் போயம்பாளையம் பகுதியில் துணியில் ஆயில் கரை நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் நேற்று இரவு ஒரு மணி அளவில் திருப்பூர் தண்டவாளத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இது குறித்து ரயில் இன்ஜின் (லோகோ பைலட்) ஓட்டுநர் தகவல் கொடுத்துள்ளார்.  ரயில்வே காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இதனையடுத்து சஞ்சீவ் குமாரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக பரவிய வதந்தியின் காரணமாக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே  காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். மேலும் சஞ்சீவ் குமாரின் கைபேசி மற்றும் வாகனங்கள் வீட்டிலேயே உள்ளதாகவும் அவர் எதற்காக இரவு நேரத்தில் ரயில் நிலையம் வரவேண்டும் என சந்தேகம் எழுப்பினர். எனவே அவர் கொலை செய்யப்பட்டு அவரின் உடைமைகள் திருடப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதையும் படிக்க :  மனைவியின் கள்ளக்காதலனை குத்திகொன்ற வடமாநில இளைஞர்!- திருப்பூரில் பயங்கரம்!

அவர்களிடம் காவல்துறை சார்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என தொடர்ந்து உறுதி அளித்தனர். இருப்பினும் கலைந்து செல்லாமல் ரயில் நிலையத்தில் சஞ்சீவ் குமார் வந்து சென்றதற்கான ஆதாரங்களை காண்பிக்க வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து ரயில்வே காவல் நிலையம் வந்த மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர்.

வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை

பின்னர் வடமாநில தொழிலாளர்களிம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நள்ளிரவு 12.56 மணிக்கு கேரளா திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ற ரயிலை இயக்கி வந்த கருப்பசாமி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சஞ்சய் குமார் சடலமாக இருந்ததாகவும் ரயிலை அவர் கடக்க முயற்சித்த போது ரயில் மோதி உயிரிழந்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை தொழிலாளர்களுக்கு காண்பித்தானர். இதன் பின்னர் வடமாநில தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர்  மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், சஞ்சீவ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்டு வீசி சென்றனரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்த நிலையில் அவர் ரயில் நிலையத்திற்கு வந்ததற்கான சிசிடிவி காட்சிகள் அவரது குடும்பத்தினரிடம் காட்டி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்

போயம்பாளையத்தில் தனியாக கடை நடத்தி வரும் சஞ்சீவ் குமார் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதனை தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். சஞ்சீவ் குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு உள்ளது என தெரிவித்தார்.

சமீபத்தில் பீகார் சட்டமன்றத்தில், பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சர்ச்சை எழுந்ததும், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது தவறான செய்தி என்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Bihar, Died, Tiruppur, Train Accident