திருப்பத்தூர் மாவட்டத்தில் செக்யூரிட்டி பணி செய்பவரின் மனைவிக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரிஏய்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்ரியுட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜாப்ரீனுக்கு, ஜி.எஸ்.டி.வரி செலுத்தாமல் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடிதங்கள் வந்தன.
இதுகுறித்து விசாரித்து பார்த்ததில் ஜாபிரின் பெயரில் திருச்செங்கோடு பகுதியில் குளோபல் டிரேடர்ஸ் என்ற காப்பர் நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த நிறுவனத்திற்கு பொருட்கள் கொள்முதல் செய்ததற்கு உரிய வரி செலுத்தவில்லை என கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. குடும்பம் நடத்தவே மாத வருமானம் போதாத நிலையில் கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு செய்து விட்டதாக வந்த கடிதத்தை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர் லியாகத், ஜாப்ரின் தம்பதி. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்ட வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அதிகாரி வரி ஏய்ப்பு செய்த பணத்தை உடனடியாக செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஜாப்ரின் உண்மையை எடுத்துக் கூறிய நிலையில், தங்களுக்கும் குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என நேரில் வந்து நிரூபிக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன தம்பதி வீட்டிற்கு வந்த கடிதங்களை தேடி எடுத்து அருகாமையில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் ஆடிட்டரிடம் காண்பித்து கேட்டபோது வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் வந்திருப்பது உண்மைதான் என கூறியுள்ளனர். இதையடுத்து ஜாப்ரீன் ஆஷிஸ் தனது ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த நூதன மோசடி குறித்து விசாரித்த போது, கொரோனா காலத்தில் ஷாயினா என்பவர் மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கி ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுச் சென்றது தெரியவந்தது. பின்னர் ஓரிரு நாட்களில் மீண்டும் தொடர்பு கொண்டு பான்கார்டை இலவசமாக விண்ணப்பம் செய்து தருகிறோம் எனக்கூறி மேலும் சில ஆவணங்களை பெற்றுச் சென்றதாகத் தெரிகிறது.
செல்போனில் வந்த ஓடிபி பெற்றுக்கொண்ட ஷாயினா அதற்குப் பிறகு தொடர்பு கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த 30 நாட்களில் மட்டும் துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஷபானா 5 கோடி, பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த குல்ஜார் 8 கோடி, வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பாத்திமா பேகம் 5 கோடி என தொடர்ந்து வரிஏய்ப்பு நோட்டீஸ்கள் வந்துள்ளன.
இந்த நூதன வரி ஏய்ப்பு மோசடி குறித்து அவர்களும் காவல் நிலையங்களில் புகார் மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போலீசார் இந்த மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating case, Crime News, Local News, Thirupathur