கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளில், மீட்கப்பட்டுள்ளவற்றை அருங்காட்சியகங்களில் வைக்காமல் மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களிலேயே கொண்டு வந்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற சிலைகள் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா வாணியம்பாடி- ஜனதா புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற சிலைகள் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் கலந்து கொண்டு சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிலைகளை பாதுகாப்பதற்காக அரசு ரூ.340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சிலை பாதுகாப்பு அறைகளை கட்ட உத்தரவிட்டது என்றும் இதுவரையிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறைகள் கட்டப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.
ஒரே ஒரு கோவிலில் மட்டுமே சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அறநிலைத்துறை சார்பில் கோவில் சொத்துக்கள் ஆன்லைனில் பதிவேற்றி பாதுகாக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் அதன் தொன்மை தன்மையை அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளில், மீட்கப்பட்டுள்ளவற்றை அருங்காட்சியகங்களில் வைக்காமல் மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களிலேயே கொண்டு வந்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
செய்தியாளர்: M.வெங்கடேசன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirupattur