திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த மணி (எ) சுப்பிரமணி(49). இவர் திருப்பத்தூர் கச்சேரி தெரு பகுதியில் மணி மெடிக்கல் என்ற பெயரில் மெடிக்கல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே அவருடைய மெடிக்கலில் வைத்து குழந்தை இல்லாத பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் MBBS மருத்துவர்கள் கொடுக்காத அதிக வீரியம் வாய்ந்த மருந்துகளையும் பொதுமக்களுக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் இதுவரை அவர் 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை குறிவைத்து மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார்கள் குவிந்த நிலையில், ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மருத்துவத்துறை அதிகாரிகள் குழு அமைத்து மணி மெடிக்கலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுப்பிரமணி வீரியம் வாய்ந்த மருந்துகளை சர்வசாதாரணமாக பெண்களுக்கு வழங்கி வந்தது உறுதி செய்யப்பட்டது. திருப்பத்தூர் நகர போலீசாருக்கு மருத்துவத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். மேலும், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையிலான வருவாய்த் துறையினர் மணி மெடிக்கல்லுக்கு சீல் வைத்தனர்.
மணி கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்பம் தரிக்க வைப்பதில் வல்லவர் என அப்பகுதியில் கூறப்படுகிறது. இதனால் தான் இவரை தேடி திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அதிக அளவில் வந்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனை பயன்படுத்தி சுப்பிரமணி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மருத்துவம் படிக்காமல் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை குறி வைத்து பணம் பறிக்கும் இதுபோன்ற நபர்களிடம் ஏமாறாமல் பெண்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேபோல் தஞ்சையில் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த சுப்பிரமணியன்(75) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி வந்துள்ளதும், 2005ம் ஆண்டு ஓய்வு பெற்ற பின் தானே ஒரு கிளீனிக்கை தொடங்கி மருத்துவம் பார்க்க ஆரம்பித்துள்ளதும் தெரியவந்தது. MBBS படிக்காமல் இவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து புகார்கள் குவிந்தன.
அதன்பேரில் தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சுப்பிரமணியனைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மருத்துவப்படிப்பு படிக்காமல் கிளீனிக் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சுப்பிரமணியனை கைது செய்த போலீசார் அவர் நடத்தி வந்த கிளீனிக்கிற்கு சீல் வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Thirupathur