திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தை அடுத்த குறிச்சி குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி. இவரது மகன் வெள்ளியப்பன்(29), மும்பையில் தங்கி கூலி தொழில் செய்து வரும் இவர் சந்திப்பு சி.என். கிராமம் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை மும்பை அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த பெண்ணின் கணவர் தனது மனைவியுடனான தொடர்பை கைவிட வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. ஆனால் அந்த பெண்ணுடனான உறவை கைவிட வெள்ளியப்பன் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வெள்ளியப்பன் சென்று வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளியப்பனை பெண்ணின் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இதனிடைய சொந்த ஊரான குறிச்சி குளத்தில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவிற்காக வெள்ளியப்பன் ஊர் திரும்பியுள்ளார். இதனை எதிர்பார்த்து காத்திருந்த அந்த கும்பல் பட்டப்பகலில் குறிச்சிகுளம் - தாழையூத்து பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இதில் அவரது கழுத்தில் வெட்டுபட்டு தொங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் கதறி அழுதனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த தாழையூத்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட நபருடன் தவறான தொடர்பில் இருந்த பெண் யார்? அவரது உறவினர்கள் யார் யார்? இந்த சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டார்களா என்பது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் குறிச்சி குளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ஐயப்பன் - திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Tirunelveli