திருநெல்வேலி மாநகரில் பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வசித்து வரும் தெருக்கள், பஜார் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் அடிக்கடி பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசாரை முடுக்கி விட்டார். இந்நிலையில் நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் தினமும் பைக்குகள் திருடுபோவதாக மேலப்பாளையம் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் ஒவ்வொரு பிளாட்பாரமாக சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகளை தேடி வந்தனர். மேலும் பேருந்து நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர். அதில் திடுக்கிடும் வகையில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் பைக்குகளை எடுத்து செல்வது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே அவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டி மாணவர்களின் புகைப்படங்களை சேகரித்தனர்.
அதன்படி நேற்று போலீசார் மப்டியில் மறைந்திருந்து கண்காணித்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை 5 மாணவர்கள் திருட்டு சாவி போட்டு எடுத்துச் செல்ல தயாராகினர். அங்கு வந்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் பாளை பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் என்பது தெரியவந்தது.
உடனே அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 2 பைக்குகளை அவர்கள் விற்பனை செய்திருந்தனர். ஒழுக்கங்களை கற்றுக்கொள்ளும் வயதில் பள்ளி மாணவர்களே பொது இடத்தில் திருட்டுச்சாவி போட்டு பைக் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : ஐயப்பன் - திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli