திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றியவர் நேவிஸ் பிரிட்டோ. நேற்று (18.02.23) இவரது மகன் அப்பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு முடி வெட்ட சென்றார். பின்னர் முடிவெட்டி விட்டு வீடு திரும்பினார். தற்போதைய ஸ்டைலில் அவர் முடி வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சிறுவன் வீடு திரும்பிய நிலையில் அதனை கண்ட சிறுவனின் தாய் ஆத்திரமடைந்து தனது கணவரான காவலருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார்.
அதன்படி அவரும் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது சிறுவனுக்கு முடி வெட்டியதை பார்த்ததும் ஆத்திரத்தின் உச்சிக்கு அவர் சென்றதாக தெரிகிறது. இதனால் மகனை அழைத்துக் கொண்டு திசையன்விளை ராமகிருஷ்ணா பள்ளி எதிரே உள்ள சலூன் கடைக்கு வந்துள்ளார். அப்போது அந்த கடையில் யாரும் இல்லை என தெரிகிறது. கடையின் உரிமையாளர் சிவராமன் உணவருந்த சென்றுள்ளார். அவரது தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு அழைத்த நேவிஸ் பிரிட்டோ தகாத வார்த்தைகளால் அவரை திட்டியதாக தெரிகிறது.
மேலும் நேரில் வருவதாக தெரிவித்த சலூன் கடைக்காரர் அடுத்த சில நிமிடங்களில் தனது கடைக்கு திரும்பி உள்ளார். ஆனால் அதற்குள் ஆத்திரம் தீராத நேவிஸ் பிரிட்டோ கடையின் ஷட்டரை கீழே இழுத்து பூட்டு போட முயன்றுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். ஆனாலும் அவர் கேட்காமல் கடைக்குள் யாரும் செல்லக்கூடாது என மறித்ததாக தெரிகிறது. காவலரின் செயலை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இதனிடையே காவலரோடு இணைந்து அவரது மனைவியும் கடைக்காரரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். கடைக்காரர் இந்த சிறுவனுக்குத்தான் முடி திருத்தம் செய்யவே இல்லை என மறுதுள்ளார். ஆனாலும் அதை காவலரும், அவரது மனைவியும் ஏற்றுக்கொள்ளவில்லை. விசாரணையில் சிறுவன் வேறு கடையில் தனது விருப்பப்படி நண்பர்களுடன் சென்று முடி திருத்தம் செய்ததாக தெரிகிறது. பெற்றோர்கள் திட்டுவார்கள் என்பதால் அவர் மாற்றி சொன்னதும் தெரியவந்தது.
இந்நிலையில், சலூன் கடைக்காரர் சிவராமன் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலர் நேவிஸ் பிரிட்டோ மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் காவலர் நேவி பிரிட்டோவை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்தார். சரியாக விசாரிக்காமல் சட்டத்தை கையில் எடுத்த காவலர் ஜான் பிரிட்டோவின் செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ஐயப்பன் - திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Tirunelveli