திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மணலி விளையை சேர்ந்தவர் சிவா. வழக்கறிஞரான இவர் திசையன்விளை மெயின் ரோட்டில் கனரா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் சொந்தமாக ஹார்டுவேர்ஸ் கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், இரவு கடையை அடைத்துவிட்டு ஷட்டருக்கு பூட்டு போடும்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது தலையில் திடீரென இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் நிலைகுலைந்துபோன சிவா சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்று சாலையில் வேகமாக ஓடியுள்ளார்.
இதையடுத்து, அந்த மர்ம நபர்களும் கையில் அரிவாளுடன் அவரைப் பின் தொடர்ந்து வெட்டுவதற்கு துரத்தினர். இதைத்தொடர்ந்து திசையன்விளை கூட்டுறவு வங்கி எதிர்ப்புறம் உள்ள மளிகை கடை ஒன்றில் சிவா தஞ்சம் புகுந்தார். அப்போது, அங்கு உள்ளே புகுந்து சிவாவை அந்த மர்ம நபர் அரிவாளால் ஓங்கி தலையில் வெட்ட முயன்றார். அதை சிவா தனது இடது கையால் தடுக்க முயன்றார். இதனால் சிவாவின் இடது கை மணிக்கட்டு துண்டாகி தொங்கியது. பின்னர் சிவா உடனே மளிகை கடையின் உட்புறம் தஞ்சம் புகுந்துள்ளார்.
அங்கும் அரிவாளுடன் வந்த நபர் கடையின் உள்ளே சென்று சிவாவை வெட்ட முயன்றார். அங்கு கையில் அரிவாளுடன் நின்ற மர்ம நபரை அருகிலுள்ள மற்றொரு மளிகை கடையை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி கைகளில் கிடைத்த செங்கல் மற்றும் கம்புகளை கொண்டு மர்ம நபரை அறிவாளை கீழே போடச் சொல்லி சத்தம் போட்டனர். அதை மீறி உள்ளே சென்றால் செங்கல்லை தூக்கி எறிந்து மர்ம நபரின் மண்டையில் எரிந்து விடுவதாகவும் மிரட்டினர்.
கையில் அரிவாளுடன் வந்த மர்ம நபர் தனது தாத்தாவின் சொத்தை கள்ளத்தனமாக பத்திரம் போட்டு ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் அபகரித்துக் கொண்டதாக மளிகை கடையின் வாசலில் நின்று ஆவேசமாக கத்தினார். மேலும் அரிவாளை கீழே போடச் சொல்லி சத்தம் போட்ட பொது மக்களை நோக்கி மர்ம நபர் கம்பையும், கல்லையும் கீழே போட்டால் தான் அறிவாளை கீழே போடுவதாக கூறினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த தங்களது ஆயுதங்களை கீழே போட்டனர். இதனால் மர்ம நபரும் தன்னுடைய அரிவாளை கீழே போட்டார்.
Also Read: தம்பி கொலைக்கு பழிதீர்க்க ஒரு வருடம் காத்திருந்த அண்ணன்.. மீன் வியாபாரி கொலையில் திடுக்கிடும் தகவல்
சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர் ஒருவர் உடனடியாக மர்ம நபரின் கையை அலேக்காக பிடித்துக்கொண்டார். மீண்டும் அரிவாளை தூக்க மர்ம நபர் முயன்றபோது மொத்தமாக கூடி இருந்த பொதுமக்கள் மர்ம நபரை தாக்க முற்பட்டனர். இதையடுத்து, அவரை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திருநெல்வேலியை சேர்ந்த பிரசாத் மற்றும் இடைச்சீவிளை பகுதியை சேர்ந்த முருகன் என்பதும் தெரியவந்தது. மேலும் ரத்த காயத்துடன் இருந்து வழக்கறிஞர் சிவாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : ஐயப்பன் (நெல்லை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Tirunelveli