விடா முயற்சியால் நெல்லையின் உதவி ஆட்சியரான மாற்றுத்திறனாளி கோகுலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோகுல் இளங்கலை ஆங்கிலம் தொடர்ந்து முதுகலை ஆங்கிலம் ஆகியவற்றை படித்துள்ளார். தற்போது முனைவர் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.
பார்வை திறன் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும் தொண்டு செய்வதில் ஆர்வமிகுதியாக இருந்துள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊக்கப்படுத்துதல், சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் ஆர்வத்துடன் இருந்த இவருக்கு கேரள மாநிலத்தில் கடந்த 2018 ல் நடந்த பெரு வெள்ள பாதிப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டு செய்வதில் ஆர்வம் காட்டி வந்த கோகுலுக்கு அவரது குறைபாடு காரணமாக பெரு வெள்ளத்தில் எந்த மக்களுக்கும் வெளியே சென்று நேரடியாக உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த அவரை அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிக்காக தயார் செய்து பெரு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அழைத்துள்ளார்.
நண்பர்களோடு இணைந்து அந்தப் பணியை சிறப்பாக செய்த இவருக்கு ஐஏஎஸ் அதிகாரி வாசுகி தான் ரோல் மாடலாக இருந்துள்ளார். அன்று முதல் தனது பேராசிரியர் கனவை கைவிட்டுவிட்டு ஆட்சியராக வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க | சீவலப்பேரி மாயாண்டி கொலை வழக்கு - 9 பேர் கைது - பழிக்குப்பழி வெறி
2020 நடைபெற்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவருக்கு மதிப்பெண் குறைவு என்பதால் வேறு பிரிவில் பணி கிடைத்துள்ளது. இருப்பினும் முயற்சியை கைவிடாமல் 2021 ஆம் ஆண்டும் தொடர்ந்து முயற்சித்து ஐஏஎஸ் பணியிடத்திற்கு தமிழகப் பிரிவில் தேர்வாகியுள்ளார். இவரின் முதல் பணியிடமாக நெல்லை மாவட்டத்தில் பயிற்சி உதவிஆட்சியராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கீழ் அவரிடம் பயிற்சி பெறும் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பார்வை திறன் குறைபாடு உடைய ஐஏஎஸ் அதிகாரி கோகுலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இது குறித்து பேசிய அவர், ‘என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இந்த பணியை மேற்கொண்டு வருகிறேன். பணியில் சேர்ந்து ஏழு நாட்கள் மட்டுமே ஆகிறது. 26 வயதாகும் தனக்கு முதல் பணி என்பதால் மிகுந்த கவனத்துடன் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறேன். எந்தவித உடல் குறைபாடு இருந்தாலும் வானமே எல்லையாக வைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தற்போது வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் உடலில் ஏற்படும் இந்த குறைபாட்டிற்கும் எளிதில் உதவி கிடைத்து வருகிறது’ என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: District collectors, Tirunelveli