முகப்பு /செய்தி /திருநெல்வேலி / போலி மதபோதகரை தீர்த்துக்கட்ட நீதிமன்றத்திற்குள் அரிவாளுடன் புகுந்து நபரால் பரபரப்பு - துப்பாக்கி முனையில் தடுத்த போலீஸ்

போலி மதபோதகரை தீர்த்துக்கட்ட நீதிமன்றத்திற்குள் அரிவாளுடன் புகுந்து நபரால் பரபரப்பு - துப்பாக்கி முனையில் தடுத்த போலீஸ்

நீதிமன்றத்தில் அரிவாளுடன் புகுந்த நபர்

நீதிமன்றத்தில் அரிவாளுடன் புகுந்த நபர்

Tirunelveli : பாளையங்கோட்டை மகிளா நீதிமன்ற அறைக்குள் கொலைவெறியுடன், அரிவாளோடு புகுந்த நபர் அங்கிருந்த காவலரால் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

  • Last Updated :

திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கை வாழ்க்கையை சீரழித்த நபரை கொலை செய்ய முயன்றபோது காவலரால் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நாள்தோறும் பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறன. அதன்படி, கோவில்பட்டியை சேர்ந்த ஜோஸ்வா என்பவரை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக காவலர்கள் அவரை மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். நீதிமன்ற அறைக்குள் நீதிபதி முன் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் அரிவாளுடன் ஜோஸ்வாவை நோக்கி வெட்டப் பாய்ந்துள்ளார். மற்றொரு வழக்கில் கைதியை அழைத்து வந்த காவலர் வேணுகோபால், துரிதமாக செயல்பட்டு அரிவாளுடன் வந்த நபரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தினார். நீதிபதி முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

பின்னர் அரிவாளுடன் வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது, அந்த நபர் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த  நவநீதகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

போலி மதப்போதகரான ஜோஸ்வா ஊர் ஊராக சென்று மத பிரச்சாரம் என்ற பெயரில் இளம் பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் நவநீதகிருஷ்ணனின் தங்கை மற்றும் நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் இருவரையும் ஜோஸ்வா ஒரே நேரத்தில் காதலித்ததுடன் இருவரையும் பல்வேறு இடங்களுக்கு வெளியே அழைத்துச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஜோஸ்வா அந்தப்பெண்ணை ஏமாற்றிவிட்டு, தாழையூத்தை சேர்ந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் மனமுடைந்த நவநீதகிருஷ்ணனின் தங்கை கடந்த 2017ஆம் ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதருஷ்ணன், தனது தங்கை சாவுக்கு காரணமான போலி மதப்போதகர் ஜோஸ்வா மற்றும் தாழையூத்தை சேர்ந்த பெண் இருவரையும் கொலை வெறியுடன் தேடியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்ற அறை

ஜோஸ்வா தலைமறைவானதால் தாழையூத்து பெண்ணை கொலை செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணின் தாய் மட்டுமே இருந்ததால், அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தபிறகும் தனது தங்கை வாழ்க்கையை சீரழித்த ஜோஸ்வாவை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார். இந்த நிலையில் தான் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் போலி மதப்போதகர் ஜோஸ்வா நெல்லை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை அறிந்து நவநீதகிருஷ்ணன் நீதிமன்றத்திற்குள் வைத்தே ஜோஸ்வாவை வெட்டி கொலை செய்யும் எண்ணத்துடன் கையில் அரிவாளுடன் நீதிமன்ற அறைக்கு தைரியமாக சென்றுள்ளார். ஆனால் காவலர் வேணுகோபால் மிகத் துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கி முனையில், நவநீதகிருஷ்ணனை சரண்டர் செய்ததால் நீதிபதி கண் முன்பு நடக்க இருந்த கொலை சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Must Read : கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வாட்ஸ்ஆப் குழுவில் சட்டவிரோதமாக பதிவிட்ட இருவர் திருப்பூரில் கைது

தற்போது பாளையங்கோட்டை போலீசார் நவநீதகிருஷ்ணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் நீதிமன்ற அறைக்குள் நீதிபதி கண் முன்னே கையில் அரிவாளுடன் கொலை செய்ய வந்த நபரால் அங்பே பெரும் பரபரப்பு நிலவியது.

top videos

    செய்தியாளர் - ஐயப்பன், திருநெல்வேலி.

    First published:

    Tags: Court, Crime News, Palayamkottai, Thirunelveli