தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி கோவில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க இந்த ஆண்டு அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கந்த சஷ்டி திருவிழாவிற்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் வீதம் 25.10.2022 முதல் 31.10.2022 வரை குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திடவும், நகர்ப்பகுதியில் சேரும் குப்பைக் கூளங்களை அவ்வப்போது அகற்றிடவும், தற்போது மழைக்காலமாக இருப்பதால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க நகர் பகுதி மற்றும் திருக்கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்கவும், 24 மணி நேரமும் தூய்மை பணிகள் செய்திடவும் திருச்செந்தூர் நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவிழாவுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் 6 நாட்கள் விரதம் இருந்து தங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்திடவும், வெறிநாய்க்கடிக்கு ஆளாகாமல் இருக்கும் பொருட்டு திருக்கோயில் வளாகங்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து செல்ல திருச்செந்தூர் நகராட்சியின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
30.10.2022 அன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவதால் பல்வேறு வழித்தடங்களில் 350 பேருந்துகள் கூடுதலாக இயங்குவதற்கு அரசு போக்குவரத்துதுறை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ’2500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். டிரோன் மூலமாகவும் பத்து கண்காணிப்பு கோபுரங்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க இந்த ஆண்டு அனுமதி கிடையாது என்றும் கோவிலில் தனி நபர் அன்னதானம் செய்ய கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
Read More: ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொல்லப்பட்டதை அறிந்து நொறுங்கிப்போனேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை
செய்தியாளர்: பி.முரளிகணேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Temple, Tiruchendur