தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் மழை பெய்யாமல் போனாலோ, வறட்சி ஏற்பட்டாலோ மழை வேண்டி பல்வேறு வினோதமான முறையில் வழிபாடு நடைபெறும். அதேபோல் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பரபுரத்தில் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் அரசமரம் மற்றும் வேப்பமரம் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்து உள்ளது. இந்த இரண்டு மரத்திற்கும் மழை வேண்டி கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்வு நடந்தது.
இங்கு நடந்த இந்த வினோதமான திருமண நிகழ்வு வெகு விமர்சையாக உண்மையான திருமணம் நடந்தால் எப்படி நடக்குமோ அதே போல் நடந்தது. இந்த விழாவிற்காக கோவில் முன்பு திருமண விழாவில் வைப்பது போல் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. 18 தாம்புல தட்டுகளில் பழ வகைகள், கற்கண்டு, சாக்லெட், பூ, பட்டு போன்ற பொருட்களுடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் மேளதாளம் முழங்க வருகை தந்தனர்.
அதன்பின்னர் கோயிலில் உள்ள முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு யாகசாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மரத்திற்கு முன்பு நாகர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மரம் மற்றும் நாகர் சிலைக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணம் நடைபெறும் நிகழ்வாக மஞ்சளால் ஆன மாங்கல்யம் கட்டப்பட்டது. அப்போது பொதுமக்கள் ஒன்றுகூடி குலவையிட்டு வழிபாடு செய்தனர்.
அதன்பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதமாக மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் திருமண விழாவில் சாப்பாடு வழங்குவது போல் வடை, பாயாசத்துடன் விருந்து வழங்கப்பட்டது.
- முரளிகணேஷ், செய்தியாளர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage