தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 10 பேர் கார் ஒன்றில் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்து இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குமுளி மலைச்சாலையில் உள்ள இரைச்சல் பாலம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இவர்களது கார் சுமார் 50அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து வந்த தமிழக- கேரள மாநில போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் 50அடி பள்ளத்தில் உள்ள பென்ஸ்டாக் குழாய்களுக்கு இடையே ( முல்லைப் பெரியாறு நீர் செல்லும் ராட்சத குழாய்கள்) சிக்கியிருந்த காருக்குள் இருந்த ஐய்யப்ப பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விபத்தில் நிகழ்விடத்திலேயே 7பேர் பரிதாபமாக பலியாகினர்.
9வயது சிறுவன் உள்பட 3பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது. மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Also Read: கொரோனா பயம்! 3 ஆண்டுகள் வீட்டு அறையை விட்டு வெளிய வராத பெண்கள்..போலீஸ் உதவியுடன் மீட்பு
விபத்தில் உயிரிழந்த ஐய்யப்ப பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அனைவரது சடலங்கள் உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து குமுளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: பழனிக்குமார் (தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sabarimala, Theni