ஆபாசமாகப் பேசிய இளைஞர்களைத் தட்டிக் கேட்டவர் கொலை.. 4 பேர் கைது
ஆபாசமாகப் பேசிய இளைஞர்களைத் தட்டிக் கேட்டவர் கொலை.. 4 பேர் கைது
Theni | தேனி அருகே மது போதையில் வீட்டின் முன் ஆபாசமாக பேசிக்கொண்டிருந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட மர வியாபாரியை அடித்து கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Theni | தேனி அருகே மது போதையில் வீட்டின் முன் ஆபாசமாக பேசிக்கொண்டிருந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட மர வியாபாரியை அடித்து கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (61). மர வியாபாரியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்துள்ளார். இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவும் அவரது வீட்டின் முன் மது போதையில் ஆபாசமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பாண்டியன் இளைஞர்களை சத்தம் போட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் கோடாங்கிபட்டியை சேர்ந்த சுகுமார் என்பவரது இரு சக்கர வாகனத்தை கட்டையால் அடித்து பாண்டியன் சேதப்படுத்தியுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த சுகுமார் அவருடன் இருந்த நண்பர்களான கபில், சேவாக் மற்றும் அஜீத் ஆகியோருடன் சேர்ந்து பாண்டியனை சரமாரியாக அடித்தும் கீழே தள்ளி கால்களால் மிதித்தும் தாக்கியுள்ளனர். அதனிடையே சேவாக்கின் தந்தை சந்திரகுமார், பாண்டியனை கம்பால் அடித்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து பாண்டியனை மீட்டனர்.
தாக்குதலுக்கு உள்ளான பாண்டியன் மயக்க நிலையில் இருந்ததால் அவரை 108ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவக் குழு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக பாண்டியனின் மனைவி செல்வி அளித்த புகாரில், கோடாங்கிபட்டியை சேர்ந்த சுகுமார் (19), கபில்(22), சேவாக் (19), அஜீத்குமார் (22) மற்றும் சந்திரகுமார் (45) ஆகிய 5 பேர் மீது பழனி செட்டிபட்டி காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சந்திரகுமார் தவிர மற்ற நான்கு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.