தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கண்டமனூர் அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (55). கூலித்தொழிலாளியான இவர் மனைவி முருகேஸ்வரி (48) உடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இந்த தம்பதியருக்கு பூங்கொடி, ஜோதிலட்சுமி என்ற 2 மகள்களும் காளிதாஸ் (29) என்ற மகனும் உள்ளனர். பெண் பிள்ளைகள் இருவரும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வரும் நிலையில், மகன் காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜி.உசிலம்பட்டியில் உள்ள தனது வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்டு முனியாண்டி இறந்து கிடப்பதாக அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் ஊர் மக்களிடம் கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஆய்வு செய்ததில், பின்னந்தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் முனியாண்டி இறந்து கிடப்பதை கண்டறிந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தேக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த கண்டமனூர் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் முனியாண்டியின் மனைவி மற்றும் மகனிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல் வெளியானது. அதில் மது போதைக்கு அடிமையான முனியாண்டி அடிக்கடி வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் விடுமுறையில் காளிதாஸ் ஊருக்கு வந்த போதும் வழக்கம் போல முனியாண்டி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை காளிதாஸ் கண்டித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவும் மதுபோதையில் தனது மனைவி முருகேஸ்வரியிடம், முனியாண்டி தகராறில் ஈடுபடவே, அதனை காளிதாஸ் தடுத்த போது அவரது கண்ணத்தில் முனியாண்டி அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் தனது தந்தை முனியாண்டியை தாக்கி கீழே தள்ளியதில் பின்னந்தலையில் அடிபட்டு உயிரிழந்தார். பின்னர் நள்ளிரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில், முனியாண்டியின் சடலத்தை வீட்டு வாசலில் போட்டி விட்டு, யாரோ கொலை செய்து விட்டதாக ஊர் மக்களிடம் சொல்லி நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது.
இதையும் படிங்க : ரூ.1 லட்சம் மதிப்பிலான பைக்குகளை திருடி 10,000-க்கு விற்க திட்டம் - போலீசில் கையும் களவுமாக சிக்கிய திருடன்
இதையடுத்து தாய் - மகன் இருவரையும் கைது செய்த கண்டமனூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். மது போதையில் தகராறு செய்து வந்த தந்தையை தாயுடன் சேர்ந்து மகனே கொலை செய்து விட்டு இருவரும் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Murder, Theni