தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிகாடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த சுமன்(28) என்பவர் அதே சமூகத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 16ம் தேதி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களுடைய சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், “நாங்கள் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 16ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். எங்களது சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
மேலும் எங்கள் திருமணத்தில் பங்கேற்ற எங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களை ஊரை விட்டு ஒதுக்கிவிட்டனர். ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் அபராத தொகை கட்ட வேண்டும், சமூக தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர். இதனால் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அபராதம் கட்டி தலைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். எங்களை ஊரை விட்டு ஒதுக்கி சாணி கரைத்து சுத்தப்படுத்த வேண்டும். ஊரில் எந்த நிகழ்விலும் பங்கேற்க கூடாது. கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்ததால் பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர்” இவ்வாறு அதில் கூறியிருந்தனர். எனவே ஊரை விட்டு ஒதுக்கிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore