தென்காசியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.4 லட்சம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் சிக்கினர்.
தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கள்ள நோட்டுகள் அதிகளவில் அனுப்பப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செங்கோட்டை மற்றும் தென்காசி போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்கள் பிடிப்பதற்கு என தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் செங்கோட்டை அருகேயுள்ள பெரியபிள்ளை வலசை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டுஇளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். இத்னை கண்ட போலீசார், அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தெற்குமேடு பகுதியை சேர்ந்த பிரகலாதன் (31), விஸ்வநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து(35) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தென்காசி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மணிகண்டன் (29) மணி செல்வன் (28)ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடமும் கள்ளநோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடமிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளும், 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், கள்ளநோட்டுகள், கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: ச.செந்தில்,தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.