Meta நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் அப்-பில் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப்களில் மேற்கொள்ளப்படும் சாட்கள் மீது கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அட்மின்களுக்கு அதிகாரம் வழங்குவதாக இது அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய வாட்ஸ் அப் வெர்சன் 2.22.11.4-ல் இந்த வசதிகள் இடம்பெற உள்ளன.
வாட்ஸ்அப் தளத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றங்கள் குறித்தும் WABetaInfo என்னும் நிறுவனம் முன்கூட்டியே தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, வாட்ஸ் அப் குரூப்களில் உறுப்பினர்கள் அனுப்பிய மெசேஜ்களை அட்மின்கள் டெலிட் செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “This Was removed by an admin’’ (இந்த மெசேன் அட்மின் ஒருவரால் டெலீட் செய்யப்பட்டது) என்ற வாசகம் அந்த மெசேஜை அனுப்பிய யூஸருக்கு காண்பிக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தான் மேம்படுத்தி வருகிறது என்றாலும், புதிய அம்சம் எப்படி காட்சியளிக்கும் என்பதற்கான ஸ்கிரீன்ஷாட் பதிவு ஒன்றை WABetaInfo நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, குரூப்பில் வரும் மெசேஜ் ஒன்றை அனைவருக்கும் நீங்கள் (அட்மின்) டெலிட் செய்த பிறகு, அந்த மெசேஜை யார் டெலிட் செய்தார்கள் என்ற விவரம் மற்ற பயனாளர்களுக்கு காண்பிக்கப்படும். இதைத் தான் வாட்ஸ் அப் நிறுவனம் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
Read More : வாட்ஸ்அப் யூஸர்களே உஷார்... இப்படியும் ஹேக்கர்கள் உங்கள் பணத்தை திருடலாம்!
வாட்ஸ் அப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்
கடந்த ஆண்டில் எபிமெரெல் மெசேஜஸ் என்ற அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. அதற்குப் பிறகு வாட்ஸ் அப்-பில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாபெரும் மாற்றம் இதுவாகும். இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, உறுப்பினர்களை குரூப்பில் இருந்து வெளியேற்றுவதற்கு ஏற்கனவே அதிகாரம் உள்ள நிலையில், இனி அவர்களின் பதிவுகளை தணிக்கை செய்வதற்கான மாடரேட்டர்களாகவும் அட்மின்கள் செயல்பட முடியும்.
குரூப்பில் எத்தகைய பதிவுகளை உறுப்பினர்கள் பதிவிட வேண்டும் என்பதை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரத்தை அட்மின்களுக்கு வழங்குவதாக இது அமையும். இது மட்டுமல்லாமல் எந்தவொரு உறுப்பினரும் தாங்கள் பதிவிட்ட பதிவை Delete for Everyone என தேர்வு செய்து கொள்வதற்கான நேர வரம்பை 2 நாட்கள் 12 மணி நேரத்திற்கு நீட்டிப்பு செய்ய வாட்ஸ் அப் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ் அப்-பின் அடுத்த அப்டேட்டில் இது இடம்பெறும் என்றாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஸ்டேட்டஸ் பதிவுகளுக்கு ரியாக்ட் செய்யும் வகையில் எமோஜிகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இருப்பதைப் போலவே இந்த எமோஜி ஆப்சன் செயல்பாட்டில் இருக்கும். குறிப்பாக, லைக், அன்பு, சிரிப்பு, ஆச்சரியம், நன்றி, சோகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் எமோஜிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.