உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வருவதாக spoofing எனப்படும் தொழில்நுட்ப மோசடி செய்து பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஏமாற்றப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வராமலே நம்முடைய மொபைலுக்கு அந்த எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வருவதாக நம்பவைக்கும் தொழில்நுட்ப மோசடிக்கு பெயர் தான் mobile number spoofing. இது எப்படி சாத்தியம்? இதை எப்படி தவிர்ப்பது? சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.
அதிமுக பிளவுபட்டிருந்த போது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசி கைதான சுகேஷ் சந்திராவை நினைவிருக்கலாம். இதுமட்டுமல்ல இவர் அதிரவைக்கும் பல மோசடிகளை அரங்கேற்றியிருக்கிறார். சிறையில் இருந்தவாரே உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்து தொழிலதிபரின் குடும்பத்தினரை ஏமாற்றி 200 கோடி ரூபாய் சுருட்டியதாக இவர் மீது ஒரு வழக்கு அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகேஷ் சந்திராவுக்கு பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமீபத்தில் வெளியானது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் மூலம் சில பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வருவது போல போலியாக தொலைபேசி அழைப்புகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுகேஷ் சந்திரா பேசியிருப்பது அமலாக்கத்துறையின் குற்றப்பத்ரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also read:
பொய் புகார் கொடுத்து 1,000க்கும் மேற்பட்ட போலீசாரை கலங்கடித்த இளம்பெண் - பகீர் காரணம்..
இந்த முறையில் மோசடியாக அழைப்புகள் வருவதை Mobile number spoofing என அழைக்கின்றனர். இது ஒன்றும் புதிய மோசடி அல்ல. 2004ம் ஆண்டு முதலே இந்த மோசடி நடந்து வருகிறது. ஒரு எண்ணில் இருந்து போலியாக அழைப்பு வரவழைக்க சில தொழில்நுட்ப திறன் நிச்சயம் தேவையாக இருந்தது. ஆனால் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பயனாக சில மென்பொருள்களும், ஆன்லைன் சேவைகளும் இந்த மோசடியை அரங்கேற்ற உதவுகின்றன.
Mobile number spoofing என்றால் என்ன?
நமக்கு கால் வரும் போது காலர் ஐடி தகவல்களை மாற்றியமைத்து, இலக்குக்கு ஆளான நபரை முக்கிய நபரிடம் இருந்து அழைப்பு வருவதாக நம்ப வைப்பதே spoofing எனப்படுகிறது. உலகளவில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பரவலாக இந்த முறையை தான் பின்பற்றுகிறார்கள்.
சட்ட அமலாக்கத்துறையினரும் கூட கிரிமினல்களை கண்டறிய spoofing செய்கின்றனர்.
Also read:
அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் நடத்தும் சிறுவர் இல்லம் மீது மதமாற்றம் புகார் - போலீசார் வழக்குப்பதிவு
இது எப்படி வேலை செய்கிறது?
மென்பொருள் சார்ந்த VoIP சேவைகளை பயன்படுத்தி மோசடியாளர்கள், உங்களுக்கு நன்கு தெரிந்த அல்லது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் எண்களில் இருந்து அழைப்புக்கள் வருவது போல காலர் ஐடி தரவுகளை மாற்றியமைக்கின்றனர். இதன் மூலம் அமெரிக்காவில் இருந்து கொண்டு கூட சென்னையில் இருந்து அழைப்பு வருவதை போல உள்ளூர் எண்ணில் இருந்து அழைப்பை வரவழைக்க முடியும்.
நடிகை ஜாக்குலினை ஏமாற்றிய Orange boxing:
மொபைல் எண் spoofing-ல் சிறிது சிக்கலான ஏமாற்றும் முறை தான் இந்த Orange boxing. அமலாக்கத்துறையினர் இது குறித்து கூடுதல் தகவல்களை தெரிவிக்காவிடினும், இந்த முறையில் தான் நடிகை ஜாக்குலின் ஏமாற்றப்பட்டிருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கேஸ்பர்ஸ்கை கூறுகையில், Orange boxing என்பது ஒரு ஆடியோ சிக்னலை உருவாக்க மென்பொருளைப் பயன்படுத்தும் முறையாகும், அது அழைப்பின் போது தொலைபேசி இணைப்புடன் இணைக்கப்படுகிறது. யாரும் அழைக்காவிட்டாலும், ஏமாற்றப்பட்ட எண்ணிலிருந்து உள்வரும் அழைப்பு காத்திருக்கிறது என்று பெறுநரை நினைக்க வைப்பதே இதன் நோக்கம்.
Also read:
Black Hole | கருந்துளை: பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மத்துக்கு விடை கிடைக்குமா?
spoofing-ல் தற்காத்துக் கொள்வது எப்படி?
உண்மையில் spoofing-ல் இருந்து பாதுகாக்க எந்தவித ஆண்டி வைரஸ் பாதுகாப்பும் தற்சமயம் கிடையாது. காலர் ஐடி செயலிகளை கூட ஏமாற்றிவிட முடியும். பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரே வழி புதிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளை நிராகரிப்பது மட்டுமே. ஆனால் வேறு வழியும் நமக்கில்லை புதிய எண்களை எடுத்து பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் மிகுந்த உஷார்நிலையில் அவற்றை அணுக வேண்டும். பிரதமர் பேசுகிறேன், முதல்வர் பேசுகிறேன், நடிகர் பேசுகிறேன் என யாராவது கூறினால் முதலில் அவர்கள் நம்மிடம் பேசுவார்களா என்ற யதார்த்தத்தை உணர வேண்டும். மீறி புதிய எண்களில் பேசுவோரிடம் தனிப்பட்டதகவல்களை பகிராமல் இருப்பது பாதுகாப்பை தரும். முக்கியமாக பேசும்போது இந்த எண்ணை அழுத்துங்கள் என கூறினால் உடனடியாக அழைப்பை துண்டித்துவிடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.