ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை சாகச பயணமாக இயக்கி வரும் இளைஞர்களை கைது செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒசூர் முதல் பேரண்டப்பள்ளி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவது மட்டுமின்றி முன் சக்கரத்தை (வீலிங்) உயர்த்தியபடி வாகனங்களுக்கு இடையூறாக சாலைகளில் வட்டமிட்டவாறு சாகச பயணமாக நினைத்து ஓட்டி வருகின்றனர்.
மற்ற பயணிகளை இடிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டும் இவர்களால் சரியாக ஓட்டுபவர்களும் விபத்துக்குள்ளாவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒசூர் - பேரண்டப்பள்ளி சாலையில் ஏற்படும் விபத்துக்களில் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்ப்பட்டு வரும் நிலையில்,இன்று இளைஞர்கள் வீலிங் செய்து சென்றபோது இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து ஏற்ப்பட்டது. இளைஞர்களுக்கு கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் இரத்தகாயம் ஏற்ப்பட்ட பின்பும் கூட இளைஞர்கள் மீண்டும் வீலிங் செய்தவாரே சென்றனர்.
இதுபோன்ற சமூக பொறுப்பற்ற இளைஞர்களால் சாலையில் சரியான முறையில் செல்பவர்களுக்கு கூட விபத்து ஏற்படும் நிலை உள்ளதால், போலிசாரிடம் இதுபோன்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.